ADDED : ஆக 28, 2024 02:51 AM

சென்னை: சென்னையைச் சேர்ந்த 'கோத்தாரி இண்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன்' நிறுவனம், அடுத்த சில ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளில் அதன் வணிகத்தை வேகமாக விரிவுபடுத்த உள்ளதாக, அதன் புதிய நிறுவனர் ரபீக் அகமது தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னையில் சைவ உணவக தொடரை உருவாக்கவும் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த 2000ம் ஆண்டு பங்குச் சந்தையிலிருந்து நீக்கப்பட்ட கோத்தாரி நிறுவனம், சமீபத்தில் தான் மீண்டும் பட்டியலிடப்பட்டது.
கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வரும் ரபீக் தெரிவித்ததாவது:
விரைவான வளர்ச்சி அடைய அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறோம். இனி வரும் காலங்களில், காலணிகள், உரங்கள், உணவு, ட்ரோன் தொழில்நுட்பம், சிந்தெட்டிக் ஜவுளி மற்றும் சோலார் துறைகளில் கவனம் செலுத்த உள்ளோம். இதன் வாயிலாக அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
ஏற்கனவே உரத் துறையில் இயங்கி வரும் இந்நிறுவனம், கத்தாரில் 7,000 கோடி ரூபாய் மதிப்பில் உர ஆலை அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்தி வருகிறது. இதுதவிர, தமிழகத்தில் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்க, இரண்டு ஆலைகள் அமைக்கவும் முயற்சித்து வருகிறோம்.
ஏற்கனவே 'கிராக்ஸ் மற்றும் கிக்கர்ஸ்' வகை காலணிகளை தயாரித்து வழங்க ஒப்பந்தம் மேற்கொண்டு, பெரம்பலுாரில் இதற்கான ஆலை அமைத்துள்ளோம்.
விவசாயிகளிடையே ட்ரோன் தேவை அதிகரித்துள்ளதால், ட்ரோன் தொழில்நுட்ப வணிகத்தில் கவனம் செலுத்த உள்ளோம். இதுதொடர்பாக மதுரையில் முதல் ட்ரோன் பயிற்சி பள்ளி அமைத்துள்ளோம்.
சென்னையில் சைவ உணவக தொடரை உருவாக்கவும் திட்டமிட்டு வருகிறோம்.
அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவதற்கு, அடுத்த இரண்டு ஆண்டுகளில் 16,000 கோடி முதல் 17,000 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் தோல் அல்லாத காலணிகள் தயாரிக்க, இரண்டு ஆலைகள் அமைக்கவும் கோத்தாரி முயற்சி