ADDED : மார் 12, 2024 06:56 AM

புதுடில்லி : கடந்த 10 ஆண்டுகளில், மொபைல் போன் உற்பத்தி 21 மடங்கு அதிகரித்து, 4.10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ஐ.சி.இ.ஏ., தெரிவித்து உள்ளது.
இது குறித்து, ஐ.சி.இ.ஏ., எனப்படும் இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் தெரிவித்து உள்ளதாவது:
கடந்த 10 ஆண்டுகளில், இந்தியாவில் மொபைல் போன் உற்பத்தி 21 மடங்கு அதிகரித்து, 4.10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. உற்பத்தி சார் ஊக்குவிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் வாயிலாக, உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க, சர்வதேச நிறுவனங்களை ஈர்ப்பதில் அரசின் கொள்கைகள் முக்கிய பங்கு வகித்ததே இதற்கு முக்கிய காரணம்.
ஏற்றுமதி
இந்தியா தன் மொத்த மொபைல் போன் தேவையில், 97 சதவீதத்தை உள்நாட்டிலேயே தற்போது உற்பத்தி செய்கிறது. மேலும், நடப்பு நிதியாண்டில் மொத்த உற்பத்தியில், 30 சதவீதம் ஏற்றுமதி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில், தற்போதைய மொபைல் போன் உற்பத்தியில் 30 சதவீதம் ஏற்றுமதிக்கானதாக இருக்கும். தொழில் துறையினர் நடப்பு நிதியாண்டில், 1.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ஏற்றுமதியை எதிர்பார்க்கின்றனர்.
கடந்த 2014 - 15ல் மொபைல் போன் உற்பத்தி 18,900 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இது நடப்பு நிதியாண்டில் 4.10 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.
எதிர்பார்ப்பு
இதேபோன்று, 2014 - 15ம் ஆண்டில், நாட்டின் மொபைல் போன் ஏற்றுமதி வெறும் 1,556 கோடி ரூபாயாக இருந்தது, நடப்பாண்டில் 1.20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.

