ரூ.1,250 கோடி முதலீட்டை ஈர்க்க 4 புதிய தொழில் பூங்கா அமைப்பு
ரூ.1,250 கோடி முதலீட்டை ஈர்க்க 4 புதிய தொழில் பூங்கா அமைப்பு
UPDATED : செப் 28, 2025 01:39 AM
ADDED : செப் 28, 2025 01:31 AM

சென்னை:தென்காசி, சிவகங்கை உட்பட நான்கு மாவட்டங்களில், 1,250 கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்க்கும் வகையில், புதிய தொழில் பூங்காக்களை தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனம் அமைக்க உள்ளது. இதற்காக அம்மாவட்டங்களில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
![]() |
தமிழகத்தில் பெரிய நிறுவனங்கள் தொழிற்சாலை அமைக்க சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழில் பூங்காக்களை, 'சிப்காட்' அமைக்கிறது.
இந்நிறுவனம், 24 மாவட்டங்களில், 48,926 ஏக்கரில் எட்டு சிறப்பு பொருளாதார மண்டலங்களை உள்ளடக்கிய, 50 தொழில் பூங்காக்களை இதுவரை அமைத்து உள்ளது .
![]() |
அங்கு, வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உட்பட பல பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சங்கரன்கோவில் தொழில் பூங்காவில், 300 கோடி ரூபாய், காரைக்குடியில், 200 கோடி ரூபாய், காட்பாடியில், 500 கோடி ரூபாய், நாட்றம்பள்ளி தொழில் பூங்காவில், 250 கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவற்றின் வாயிலாக, 12,500 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இந்த நான்கு தொழில் பூங்காக்களில் நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இடம்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.