சென்னையில் கார் டயர் தயாரிப்பு 'மிஷலின்' ரூ.564 கோடி முதலீடு
சென்னையில் கார் டயர் தயாரிப்பு 'மிஷலின்' ரூ.564 கோடி முதலீடு
ADDED : செப் 22, 2024 12:59 AM

சென்னை:வாகன டயர் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான மிஷலின், 564 கோடி ரூபாய் விரிவாக்க திட்டத்தில், கார்களுக்கான பிரீமியம் டயர்களை சென்னையில் தயாரிக்க உள்ளது.
பிரான்சை தலைமையிடமாகக் கொண்ட, டயர் தயாரிப்பு நிறுவனமான மிஷலின், சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் ஏற்கனவே தொழிற்சாலை அமைத்துள்ளது.
அங்கு லாரி, பஸ் போன்ற கனரக வாகனங்களுக்கான டயர்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது, அடுத்த கட்ட விரிவாக்கமாக, 564 கோடி ரூபாய் முதலீட்டில், கார் டயர்களை தயாரிக்க உள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், அடுத்த ஆண்டு மூன்றாவது காலாண்டுக்குள், விரிவாக்கப்பட்ட தொழிற்சாலையில், கார் டயர் உற்பத்தி துவங்கும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மிஷலின் இந்தியா நிறுவன நிர்வாக இயக்குனர் ககன்ஜோத் சிங் கூறியதாவது:
உலகின் மிகப்பெரிய சந்தையாகவும், உலக நாடுகளின் பல்வேறு நிறுவனங்களின் முதலீட்டுக்கு ஏற்ற இடமாகவும் இந்தியா இருக்கிறது.
பிரீமியம் கார்களுக்கான டயர்கள் தயாரிப்பில் ஈடுபடுவதன் வாயிலாக, சந்தையில் கணிசமான பங்கை பிடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
'மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ், இந்திய அரசு விடுத்து வரும் அழைப்பை ஏற்றும்; திறன்மிக்க உள்ளூர் பணியாளர்களை பயன்படுத்தும் வகையிலும், இந்த முடிவு எடுக்கப்பட்டுஉள்ளது.
இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும், கார் டயர்களின் தேவையை நிறைவு செய்யும் நோக்கில், மிஷலின் கார் டயர்களை தயாரிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை தொழிற்சாலைக்கு, ஏற்கனவே 2,840 கோடி ரூபாய் முதலீடு
கார் டயர் தயாரிப்புக்கென தற்போது, 564 கோடி ரூபாய் முதலீடு
தொழிற்சாலையில் ஏற்கனவே, 800 பேர் பணிபுரிகின்றனர்
தற்போதைய விரிவாக்கத்தால், மேலும் 200 பேருக்கு வேலைவாய்ப்பு.