ADDED : பிப் 27, 2024 07:18 AM

புதுடில்லி : மண் வளத்தை மேம்படுத்தவும், பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், கடந்த 2014 - 15ம் ஆண்டு முதல் இதுவரை, நாடு முழுதும் 8,300 மண் பரிசோதனை ஆய்வகங்களை அமைத்துள்ளதாக, மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மண் வளத்தை மேம்படுத்தவும், பயிர்கள் வளர்ப்பில் விவசாயிகளின் செலவை குறைக்கவும் அரசு மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த 2014 - 15ம் ஆண்டு முதல் இதுவரை, 8,272 மண் பரிசோதனை கூடங்கள் நாடு முழுதும் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றில், 1,068 நிலையான மண் பரிசோதனை ஆய்வகங்கள், 163 நடமாடும் சோதனைக் கூடங்கள், 6,376 சிறு ஆய்வகங்கள் மற்றும் 665 கிராம அளவிலான மண் பரிசோதனை கூடங்கள் உள்ளன. மேலும், 23.58 லட்சம் விவசாயிகளுக்கு, மண் சுகாதார அட்டைகளை அரசு இலவசமாக வழங்கியுள்ளது.
இந்நடவடிக்கையானது, உரங்களின் சீரான பயன்பாட்டை ஊக்குவிப்பது, உள்ளீட்டு செலவை குறைப்பது மற்றும் பயிர் சாகுபடியை அதிகரிப்பதை நோக்கமாக கொண்டதாகும்.
ரசாயன உரங்களை முறைப்படி பயன்படுத்துவதற்கான பரிந்துரைகளை விவசாயிகளுக்கு வழங்கவும்; விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும், இத்திட்டத்தின் கீழ் மண் பரிசோதனை ஆய்வகங்களுக்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மொத்தம் 230 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
