ADDED : ஜன 11, 2024 01:18 AM

புதுடில்லி:கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் வழங்கப்பட்ட 'இ - வே' பில்கள் 9.52 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் சாதனை உச்சமான 10.03 கோடி இ - வே பில்களை எட்டிய பின், இதுவே இரண்டாவது அதிகபட்ச உயர்வாகும்.
கடந்த நவம்பரில் இது 8.75 கோடியாக சரிந்தது குறிப்பிடத்தக்கது. டிசம்பரில் வழங்கப்பட்ட இ - வே பில்கள், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத ஜி.எஸ்.டி., வருவாயில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
எலக்ட்ரானிக் மற்றும் ஆட்டோமொபைல் பொருட்களின் அதிக விற்பனை காரணமாக, டிசம்பரில் இ - வே பில் வழங்கல் அதிகரித்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
மேலும், நுகர்வு தன்மை அதிகரிப்பும்; வருவாய் அதிகாரிகளின் மேம்படுத்தப்பட்ட ஆய்வு மற்றும் வரி செலுத்துவோரின் அதிக இணக்கமும் இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது.
ஜி.எஸ்.டி., நடைமுறையின்படி, 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கான, மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு, இ - வே பில் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.