'3 மாதங்களுக்கு ஒருமுறை ஜி.எஸ்.டி., எம்.எஸ்.எம்.இ.,க்கு அனுமதி தேவை'
'3 மாதங்களுக்கு ஒருமுறை ஜி.எஸ்.டி., எம்.எஸ்.எம்.இ.,க்கு அனுமதி தேவை'
ADDED : செப் 04, 2026 07:21 AM

சென்னை: 'பெரிய நிறுவனங்கள் பணம் தர தாமதம் செய்வதால், எம்.எஸ்.எம்.இ.,க்கள் மாதம்தோறும் ஜி.எஸ்.டி., 'ரிட்டன்' தாக்கல் செய்து, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பணம் செலுத்த அனுமதிக்க வேண்டும் என, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்த தமிழக அமைச்சர்களிடம், தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கூட்டம், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் வரும், 12ம் தேதி நடக்கிறது. இதில் அனைத்து மாநில நிதி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
தமிழகம் சார்பில் அந்த கூட்டத்தில் வலியுறுத்த வேண்டிய விஷயங்கள் தொடர்பாக, 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், தொழில் கூட்டமைப்புகளின் பிரதிநிதிகளிடம், சென்னை தலைமை செயலகத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன், வணிக வரி துறை அமைச்சர் லோகேஷ் தமிழ் செல்வன் நேற்று கருத்துக்கள் கேட்டனர்.
'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் வாசுதேவன்:
சிறு, குறுந்தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கும் பெரிய நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் குறித்த காலத்தில் பணம் தருவதில்லை. இதனால், சப்ளை செய்த நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஜி.எஸ்.டி., ரிட்டன் தாக்கல் மற்றும் மாதம்தோறும் வரி செலுத்த வேண்டும் என்று தற்போது இருப்பதை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரி செலுத்துவது, மாதம்தோறும் ரிட்டன் தாக்கல் செய்வதாக மாற்ற, கவுன்சிலில் வலியுறுத்துமாறு, தமிழக அமைச்சர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
