ADDED : பிப் 08, 2024 01:29 AM

திருப்பூர்:இந்திய பருத்தி கழகம், ஒவ்வொரு ஆண்டும் பருத்தி சாகுபடி மற்றும் மகசூல், பஞ்சுக்கான தேவைகள், ஏற்றுமதி உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொண்டு இருப்பு பட்டியல் தயாரிக்கிறது.
பருத்தி விளைச்சல், 316 லட்சம் 'பேல்' இருக்கும் என்றும், ஜவுளி தேவைக்கு, 294 லட்சம் பேல் தேவையெனவும் கணக்கிடப்பட்டுள்ளது. ஒரு பேல் என்பது 170 கிலோ.
கடந்த அக்., மாதத்தில் இருந்தே, 356 கிலோ கொண்ட ஒரு 'கேண்டி' பஞ்சு விலை, 55,000 முதல், 56,000 ரூபாய் வரை நிலை கொண்டிருக்கிறது; நுால் விலையிலும் மாற்றமில்லை.
கடந்த அக்டோபரிலிருந்து ஜனவரி வரையிலான நான்கு மாதங்களில், 141.04 லட்சம் பேல் வந்திருந்தது; நேற்றைய நிலவரப்படி, இது, 150 லட்சம் பேல் ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஜனவரியில் மட்டும் 50 லட்சம் பேல் விற்பனைக்கு வந்துள்ளது. மஹாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அதிக அளவு பருத்தி விற்பனைக்கு வருகிறது.
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷனான, 'டாஸ்மா' தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''பதுக்கல் எதுவும் இல்லாமல், மார்க்கெட்டுக்கு பஞ்சு வந்து கொண்டிருக்கிறது. பஞ்சு விலை சீராக இருப்பதால், நுால் விலையிலும் பெரிய மாறுதல் ஏற்பட வாய்ப்பில்லை.
''பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், கோடை கால ஆர்டர் வரத்து துவங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். ஏற்றுமதியாளர்களிடம் இருந்து, நுாற்பாலைகளுக்கும், ஆர்டர் வந்து கொண்டிருக்கிறது. ஜவுளி உற்பத்தியாளரின் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு, நுாற்பாலைகளும் தயாராக இருக்கின்றன,'' என்றார்.

