ADDED : அக் 24, 2024 11:43 PM

சென்னை:''காஞ்சிபுரம், செங்கல்பட்டில் வீடு, தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்ய, குழாய் வழித்தடம் அமைக்கப்படுகிறது.
''வாகனங்களுக்கு வினியோகம் செய்ய, வரும் டிசம்பருக்குள், கூடுதலாக எட்டு சி.என்.ஜி., மையங்கள் துவக்கப்படும்,'' என, 'ஏ.ஜி., அண்டு பி பிரதம்' நிறுவனத்தின் பிராந்திய தலைமை அதிகாரி திருக்குமரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள வீடுகள், தொழிற்சாலை, வாகனங்களுக்கு இயற்கை எரிவாயு வினியோகம் செய்யும் பணிக்காக, எங்கள் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த இரு மாவட்டங்களிலும் தற்போது, 42 மையங்கள் வாயிலாக, வாகனங்களுக்கு, இயற்கை எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.
வரும் டிசம்பருக்குள் கூடுதலாக எட்டு மையங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளன.
வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயு வினியோகிக்க, ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஸ்ரீபெரும்புதுார், 'சிப்காட்' தொழில் பூங்காக்களில் குழாய் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
வீடுகளுக்கான பிரிவில், ஒரு லட்சம் வீடுகளுக்கு, வினியோகிக்க கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை, 40,000 பேர் விண்ணப்பித்த நிலையில், 6,400 வீடுகளுக்கு வினியோகம் துவங்கிஉள்ளது.
பிரிட்டானியா, சாம்சங் உட்பட, 25 தொழிற்சாலைகளுக்கு எரிவாயு வினியோகம் செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.