UPDATED : பிப் 18, 2026 01:28 AM
ADDED : பிப் 18, 2026 01:01 AM

புதுடில்லி, பிப். 18--
இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தால் அமெரிக்க ஆப்பிளுக்கு வரி குறைக்கப்பட்டிருப்பது, இந்திய ஆப்பிள் விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என்று சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பான ஜி.டி.ஆர்.ஐ., தெரிவித்துள்ளது.
அதன் அறிக்கை:
இமயமலை பகுதியில் வாழ்பவர்களின் முதுகெலும்பாக ஆப்பிள் விவசாயம் இருந்து வருகிறது. நாட்டில் ஆண்டுக்கு 25 லட்சம் டன் ஆப்பிள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஜம்மு --- காஷ்மீர் 70- - 75 சதவீதம், ஹிமாச்சல் பிரதேசம் 20 சதவீதம், உத்தரகண்ட் 2 சதவீதம் ஆப்பிள் உற்பத்தியில் பங்களிக்கின்றன.
இது கிட்டத்தட்ட உள்நாட்டு உற்பத்தியில் 22 சதவீதத்துக்கு இணையானது. ஆப்பிள் இறக்குமதி மதிப்பு 2004ல் சுமார் 9 கோடி ரூபாயிலிருந்து 2024ல் 3,780 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இறக்குமதி ஆப்பிளுக்கு 50 சதவீத வரி அமலில் உள்ளது.
தற்போது அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட அளவு ஆப்பிளுக்கு 50 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக வரியை குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரான், துருக்கி, நியூஸிலாந்து, அமெரிக்கா, தென்னாப்ரிக்கா, சிலி ஆகிய நாடுகளிலிருந்து ஆப்பிள் இறக்குமதி செய்யப்படுகிறது. அமெரிக்காவுக்கு குறைக்கப்பட்டுள்ள வரியால் இனி ஆப்பிள் இறக்குமதி செய்யும் போட்டி நாடுகளும் வரிகுறைப்பை கேட்கும். எனவே, நாட்டின் ஆப்பிள் சந்தையை இறக்குமதி ஆப்பிள் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதனால், நம் நாட்டின் விவசாயிகளுக்கு கிடைக்கும் வருமானம் பாதிக்கும்.
இவ்வாறு தெரிவித்துள்ளது.
* 2025ம் நிதியாண்டில் 5,58,000 டன் ஆப்பிள் இறக்குமதி
*அமெரிக்க ஆப்பிளுக்கு வரி 50ல் இருந்து 25 சதவீதமாக குறைப்பு

