ADDED : மே 04, 2025 09:30 PM

மும்பை:டி.டி.எச்., வணிக இணைப்புக்கான பேச்சுவார்த்தையை பார்தி ஏர்டெல் மற்றும் டாடா குழுமம் ரத்து செய்துவிட்டதாக, பங்குச் சந்தை தாக்கலில் தெரிவித்துள்ளன.
டாடா குழுமத்தின் டி.டி.எச்., சேவை நிறுவனமான டாடா பிளேவை, பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் துணை நிறுவனமான பார்தி டெலிமீடியா உடன் இணைப்பதற்கு சாத்தியமான வழியை ஆராய்வதற்காக, டாடா குழுமத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பார்தி ஏர்டெல் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், திருப்திகரமான தீர்வை காண முடியாததால், இரு தரப்பும் பரஸ்பர விவாதங்களை முடிவுக்கு கொண்டு வருவதாக பங்குச் சந்தை தாக்கலில் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனங்களின் இணைப்பு சாத்தியப்பட்டிருந்தால், கடந்த 2016ல் டிஷ் டிவி - வீடியோகான் 'டிடுஎச்' இணைப்பிற்கு பின், டி.டி.எச்., துறையின் இரண்டாவது இணைப்பாக இது இருந்திருக்கும்.

