விண்வெளி துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
விண்வெளி துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி
ADDED : பிப் 23, 2024 12:05 AM

புதுடில்லி: விண்வெளி துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், விண்வெளி துறையில் அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
திருத்தப்பட்ட அன்னிய நேரடி முதலீட்டுக் கொள்கையின்படி, விண்வெளி துறையில் அரசின் அனுமதி பெறத் தேவையில்லாத தானியங்கி அன்னிய நேரடி முதலீடு வழியிலும் 100 சதவீதம் அனுமதிக்கப்படுகிறது.
தற்போது நடைமுறையிலுள்ள கொள்கையின்படி, செயற்கைக்கோள்களை நிறுவுவதற்கும், இயக்குவதற்கும் அரசின் அனுமதி பெற்ற வழியில் மட்டுமே 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படுகிறது.
மேலும் இந்த தாராளமயமாக்கப்பட்ட நுழைவு வழிகள், விண்வெளியில் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய சாத்தியமான முதலீட்டாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும், இதன்படி செயற்கைக்கோள் துணைத் துறைகள் மூன்று வெவ்வேறு செயல்பாடுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு துறையிலும் அன்னிய முதலீட்டுக்கான வரம்புகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி கொள்கை 2023ல், மேம்பட்ட தனியார் பங்களிப்பின் வாயிலாக விண்வெளித் துறையில் இந்தியாவின் திறனை வெளிப்படுத்துவதற்கான விரிவான திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தக் கொள்கை, நாட்டின் விண்வெளி திறன்களை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
விண்வெளியில் ஒரு செழிப்பான வணிக இருப்பை உருவாக்குதல்; விண்வெளி சார்ந்த துறைகளில் தொழில்நுட்ப மேம்பாடு பயன்களுக்கான உந்துசக்தியாக விண்வெளியை பயன்படுத்துதல்; சர்வதேச உறவுகளை மேம்படுத்தி, தொடர்புடைய அனைத்து நாடுகளுடனும் விண்வெளி பயன்பாடுகளை திறம்படச் செயல்படுத்துவதற்கான உகந்த சூழல் அமைப்பை உருவாக்குதல், இந்தக் கொள்கையின் பிற நோக்கங்களாகும்.
விண்வெளி துறை நிறுவன பங்குகள் விலையேற்றம்:
நுாறு சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, நேற்று பங்குச் சந்தையில் விண்வெளி துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தது.
அதிகபட்சமாக 'டேட்டா பாட்டர்ன்ஸ் இந்தியா' நிறுவனத்தின் பங்குகள் 8.97 சதவீதம் அதிகரித்து, 2,245 ரூபாயாகவும்; எம்.டி.ஏ.ஆர்., நிறுவனத்தின் பங்குகள் 6.31 சதவீதம் அதிகரித்து, 2,025 ரூபாயாகவும் இருந்தன.
இவை தவிர, 'அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஆசாத் இன்ஜினியரிங், பாராஸ் டிபென்ஸ், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் எல்., அண்டு டி.,' நிறுவனங்களின் பங்குகள், 1ல் இருந்து 2 சதவீதம் வரை அதிகரித்திருந்தன.