ADDED : டிச 10, 2024 10:54 PM

புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 3.16 லட்சம் கோடி ரூபாய் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
ராஜ்யசபாவில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளதாவது:
செப்.30ம் தேதி நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன் 3.16 லட்சம் கோடி ரூபாயாகவும்; தனியார் வங்கிகளின் வாராக்கடன் 1.34 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் நிலுவை கடன் விகிதம் 3.09 சதவீதமாகவும்; தனியார் வங்கிகளின் நிலுவை கடன் விகிதம் 1.86 சதவீதமாகவும் உள்ளது.
கடந்த மார்ச் 31ம் தேதி வரை, 50 கோடி ரூபாய்க்கு மேல் கடனை திருப்பி செலுத்தாத 580 நிறுவனங்கள், திவாலானவை என அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், செப்., 30ம் தேதி வரையிலான காலத்தில், 1,068 கார்ப்பரேட் திவால் நடைமுறைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, கடனாளிகளிடம் இருந்து 3.55 லட்சம் கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.