சிறிய அணு உலைகள் அமைக்க ஆர்வம் காட்டும் பெரிய நிறுவனங்கள்
சிறிய அணு உலைகள் அமைக்க ஆர்வம் காட்டும் பெரிய நிறுவனங்கள்
ADDED : ஜூன் 16, 2025 12:39 AM

புதுடில்லி:'பாரத் ஸ்மால் ரியாக்டர்ஸ்' என்ற பெயரில், இந்தியா செயல்படுத்த உள்ள சிறிய அணுமின் நிலையங்கள் திட்டத்தில் பங்கேற்க, நாட்டின் பெருநிறுவனங்கள் பல ஆர்வம் தெரிவித்துள்ளன.
பி.எஸ்.ஆர்., என்ற பெயரில் தொழிற்துறை பயன்பாட்டுக்கான அணுமின் உற்பத்திக்கு, சிறிய அணுமின் நிலையங்களை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
'வளர்ந்த இந்தியா 2047' என்ற இலக்கை நோக்கி, அணுமின் உற்பத்தியை 100 ஜிகாவாட் ஆக அதிகரிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில், இத்திட்டத்தை அரசு மேற்கொள்கிறது.
மேலும், 2070ம் ஆண்டுக்குள், இந்தியாவை கார்பன் உமிழ்வற்ற நாடாக, துாய எரிசக்தி இலக்கை 100 சதவீதம் எட்டும் இலக்கிலும் இத்திட்டம் பயன்படும்.
விருப்பம்
இத்திட்டத்தில் பங்கேற்க, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி குழுமம், இந்திய ரயில்வே, கிரீன்கோ, வேதாந்தா, எச்.பி.சி.எல்., மிட்டல் எனர்ஜி, ஜே.எஸ்.டபிள்யூ., குழுமம், ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
அரசுக்கு சொந்தமான, 'நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' எனப்படும் என்.பி.சி.ஐ.எல்., இதற்கான விண்ணப்பங்களை வழங்கலாம் என அறிவித்தது.
இதையடுத்து, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், விண்ணப்பித்துள்ள இந்த பெருநிறுவனங்கள் பலவும், தங்கள் பயன்பாட்டுக்கு பெரிய மின் உற்பத்தி மையங்களை கொண்டிருப்பதால், சிறிய அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு கூடுதல் தகுதி பெறுகின்றன.
தேர்வாகும் நிறுவனங்கள், அணுமின் நிலையம் அமைக்க தொழில்நுட்ப ஆதரவை என்.பி.சி.ஐ.எல்., வழங்கும். பின்னர், அதன் இயக்கத்தை தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும்.
இலக்கு
வரும் 2033ம் ஆண்டுக்குள், குறைந்தது ஐந்து அணுமின் நிலையங்களை அமைக்கச் செய்ய மத்திய அரசு இலக்கு வைத்து உள்ளது.
தற்போது, நாட்டின் அணுமின் உற்பத்தி 8.78 ஜிகாவாட். இதை 2030க்குள் 22.48 ஜிகாவாட் ஆக உயர்த்தவும்; 2047 ல் 100 ஜிகாவாட் ஆக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறு அணுமின் நிலையம் அமைக்க விரும்பும் நிறுவனங்கள்
ரிலையன்ஸ்
அதானி
இந்திய ரயில்வே
கிரீன்கோ
வேதாந்தா
எச்.பி.சி.எல்.,
மிட்டல் எனர்ஜி
ஜே.எஸ்.டபிள்யூ., குழுமம்
ஹிண்டல்கோ இண்டஸ்ட்ரீஸ்
இத்தகைய அணுமின் நிலையங்களை அமைப்பதற்கு, குறைந்த அளவிலான நிலமே தேவைப்படும். விரைவாக அமைக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டுவர முடியும். தனியார் பங்களிப்புடன் இவற்றை அமைக்க, குறைவான பட்ஜெட் போதும்.
இத்தகைய அணுமின் நிலையங்களை ஏற்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றுக்கு, நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் 20,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.