UPDATED : செப் 07, 2025 12:28 AM
ADDED : செப் 07, 2025 12:19 AM

பல்வேறு பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., விகிதம் சமீபத்தில் குறைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாக, 18 மற்றும் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்ட பொருட்களை சார்ந்த நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சி வாய்ப்புள்ளது. மேலும், இந்த குறைந்த வரி விகிதங்களை கொண்டுள்ள தொழில்கள், முறைப்படுத்தப்பட்டுள்ள அமைப்புக்குள் வருவது உறுதி.
கடந்த சில காலாண்டுகளாக நுகர்பொருட்கள் துறை நிறுவனங்கள் தேக்க நிலையை சந்தித்து வந்தன. குறிப்பாக, நகரங்களில் இந்த துறை நிறுவனங்களின் வளர்ச்சி மந்தநிலையில் இருந்தன. தற்போதைய வரி விகித மாற்ற அறிவிப்பு, இந்த துறையின் தேக்க நிலையை போக்கக்கூடிய வாய்ப்புள்ளது.
பிஸ்கட்டுகளு-க்கான ஜி.எஸ்.டி., ஏற்கனவே 18 சதவீதமாக இருந்தது; தற்போது இது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சீஸ் மற்றும் மில்க் ஷேக்ஸ்களு-க்கான வரி விகிதம் முன்பு 12 சதவீதமாக இருந்தது; தற்போது இது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிஸ்கட்ஸ் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக பிரிட்டானியா உள்ளது. மேலும் பிரிட்டானியாவின் 60 சதவீத விற்பனை, மிகச் சிறிய பிஸ்கட் பாக்கெட்டுகளான 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் பாக்கெட்டுகள் வாயிலாக வருகிறது.
தற்போது வரி விகித மாற்றத்தால், இந்த விலையுள்ள பாக்கெட்டுகளின் விலையை குறைக்காமல், மாறாக அதன் அளவை கூட்டுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், இந்த பிஸ்கட் பொருட்களின் விற்பனை அளவு அதிகமாக வாய்ப்புள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பிரிட்டானியாவின் சந்தை வளர்ச்சி (2026 நிதியாண்டில் 0.65 சதவீத வளர்ச்சி) அதன் போட்டி நிறுவனங்களான பார்லி போன்ற நிறுவனத்தை காட்டிலும் அதிகரித்து வருகிறது.
மூலப்பொருட்கள் விலை முக்கியமாக ஹிந்தி ஹார்ட்லேண்டு என்று சொல்லக்கூடிய வட மாநிலங்களில் இந்த நிறுவனத்தின் சந்தை வளர்ச்சி உயர்ந்துள்ளது. அது மட்டுமல்லாமல், பிரீமியம் ஸ்நாக்ஸ் பிரிவில் பிரிட்டானியா நிறுவனத்தின் வளர்ச்சி கடந்த மூன்றாண்டுகளாக 3 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளன.
பிஸ்கட் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருந்தாலும், பிரிட்டானியா ஒட்டுமொத்தமாக உணவுப் பொருட்கள் சார்ந்த நிறுவனமாக தன்னை விரிவுபடுத்தி வருகிறது. ரஸ்க், கேக்ஸ், வேபர்ஸ் மற்றும் பால் தயாரிப்புகளில் தங்களது தயாரிப்புகளை சந்தையில் விரிவுபடுத்தி வருகிறது. வரும் நாட்களில் இந்த தயாரிப்புகள் சந்தையில் மிக முக்கிய இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சமீப மாதங்களில் மூலப் பொருட்களுக்கான செலவினம் அதிகரித்த சூழலை, பிரிட்டானியா நிறுவனம் எதிர்கொண்டு வந்தது. குறிப்பாக பாமாயில், கோகோ போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்ந்ததால், மூலப்பொருட்களின் செலவினம் உயர்ந்தது.
ஆனால், தற்போது கமாடிட்டி பொருட்களின் விலை ஓரளவு சமநிலையை அடைந்துள்ளது. அதனால் மூலப் பொருட்களுக்கான செலவினம் இனி அதிகரிக்க வாய்ப்பில்லை. இதன் காரணமாக, இந்நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி மற்றும் லாப வளர்ச்சி அதிகரிக்கும். குறிப்பாக சிறு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களை காட்டிலும், சிறப்பான வளர்ச்சியை அடைய வாய்ப்புள்ளது.
அது மட்டுமல்லாமல் மூலப் பொருட்களான சர்க்கரை, கோதுமை, மைதா ஆகியவற்றின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. இந்த நிலை தொடர்வதால், பிரிட்டானியா நிறுவனத்தின் லாப வளர்ச்சி அதிகரிக்கும் மற்றும் செலவினம் கட்டுக்குள் இருக்கவும் உதவும்.
பிரிட்டானியாவின் சந்தை மதிப்பு உயர்ந்த நிலையில் உள்ளது. தற்போது 2026 - -27ம் நிதியாண்டில் எதிர்பார்க்கும் ஒரு பங்குக்கான லாபத்தை (இ.பி.எஸ்.,) விட 52 மடங்கு (பி.இ.,) பிரிட்டானியாவின் பங்கு வர்த்தகமாகி வருகிறது.
ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு பங்கு லாபத்தை விட 42 மடங்கு (பி.இ.,) என்ற அளவிலேயே இந்த நிறுவனத்தின் பங்கு வர்த்தகமாகி வந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் வரும் காலங்களில் சந்தையில் இறக்கம் காணும் போதும், நிறுவனத்தின் சந்தை மதிப்பு சாதகமாக இருக்கும் போதும், லாப வளர்ச்சி வேகம் பிடிக்கும் போதும், முதலீட்டாளர்கள் இந்த பங்கை கவனத்தில் கொள்ளலாம்.
வலுவான பிராண்ட், மிகப் பெரிய பரந்த அளவிலான வளர்ச்சி, ஜி.எஸ்.டி., குறைப்பு போன்ற சாதக அம்சங்களால் பிரிட்டானியா வரும் ஆண்டுகளில் வளர்ச்சியை அடையும் என எதிர்பார்க்கலாம்.
ஷ்யாம் சேகர்,
ஐதாட்பிஎம்எஸ் ,பங்கு ஆய்வு குழு