பத்து வாரங்களில் ரூ.16,700 கோடி டிபாசிட் தொகை திரட்டிய கனரா வங்கி
பத்து வாரங்களில் ரூ.16,700 கோடி டிபாசிட் தொகை திரட்டிய கனரா வங்கி
ADDED : மே 11, 2025 11:29 PM

புதுடில்லி:டிபாசிட் தொகை திரட்டுவதற்கான முயற்சியில் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட கனரா வங்கி, அதன் 82,000 பணியாளர்களின் வாயிலாக 10 வாரங்களில் 16,700 கோடி ரூபாய் டிபாசிட் தொகையை திரட்டியுள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குநர் சத்யநாராயண ராஜூ தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
டிபாசிட் தொகை திரட்டலில் அமைப்பு ரீதியான சவால்களுக்கு மத்தியில், வங்கியின் உயர்மட்ட நிர்வாகம், வங்கியைச் சேர்ந்த 82 பணியாளர்களில் ஒவ்வொரு பணியாளரையும் தொடர்பு கொண்டு, அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடையவர்கள் உள்ளிட்டோர் வாயிலாக நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு அல்லது சில்லரை கால வைப்புத் தொகையில் 10 லட்சம் ரூபாய் வரை டிபாசிட் தொகை திரட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டது.
பணியாளர்கள் இதற்கு முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, டிபாசிட் தொகை பெறுவதற்கான இயக்கம் கடந்த ஜனவரி 26ம் தேதி துவக்கப்பட்டது.
இம்முயற்சி நேர்மறையான முடிவுகளை பெற்றுத் தந்தது. இதனால், பணியாளர்கள் வாயிலாக 16,700 கோடி ரூபாயை டிபாசிட்டாக சேகரிக்கப்பட்டுள்ளது.
இது, கடந்த டிசம்பர் காலாண்டில் இருந்த கடன் டிபாசிட் விகிதத்தை 76 சதவீதத்தில் இருந்து, மார்ச் காலாண்டில் 73 சதவீதமாக குறைக்க உதவியது.
இவ்வாறு அவர் கூறினார்.