விண்வெளி கருவிகள் உற்பத்தி மையம் ரூ.100 கோடி வழங்கும் மத்திய அரசு
விண்வெளி கருவிகள் உற்பத்தி மையம் ரூ.100 கோடி வழங்கும் மத்திய அரசு
ADDED : ஏப் 09, 2025 12:51 AM

சென்னை:தமிழகத்தில் விண்வெளி துறையில் ஈடுபட்டுள்ள தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, 'ஸ்பேஸ் மேனுபேக்சரிங் கிளஸ்டர்' எனப்படும் தொழிற் பூங்காவில், பொது கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு மத்திய அரசின், 'இன்ஸ்பேஸ்' நிறுவனம், 100 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளது.
நாட்டில் விண்வெளி துறையில், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் போல், தனியார் நிறுவனங்களும் ஈடுபடுவதற்கு, 2020 ஜூனில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
இதனால், பல நிறுவனங்கள் ராக்கெட், செயற்கைக்கோள் உருவாக்கம், ராக்கெட் எரிபொருள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிறுவனங்களை ஊக்குவிப்பது, அனுமதி வழங்குவது போன்ற பணிகளை, 'இன்ஸ்பேஸ்' எனப்படும் இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் மேற்கொள்கிறது.
இதுதவிர, விண்வெளி துறையில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற் பூங்கா, தொழிற்நுட்ப மையங்கள் அமைப்பதையும் ஊக்குவிக்கிறது.
அதன்படி, தமிழகத்தில், 'ஸ்பேஸ் மேனுபேக்சரிங் கிளஸ்டர்' எனப்படும் விண்வெளி துறைக்கான உற்பத்தி மையம் அமைக்க, அதில் தொழில் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், பொது தொழில்நுட்ப கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, 100 கோடி ரூபாய் வழங்க இன்ஸ்பேஸ் முன்வந்துள்ளது.
இதற்கு, தமிழக அரசு குறைந்தது, 40 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும். அங்கு, உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். இதனால் தமிழகத்தில், வேலைவாய்ப்புகள் அதிகஅளவில் உருவாகும்.