எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் தரத்தை பரிசோதிக்க ரூ.10 கோடியில் மையம்
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் தரத்தை பரிசோதிக்க ரூ.10 கோடியில் மையம்
ADDED : மார் 29, 2025 10:55 PM

சென்னை:காஞ்சிபுரம் பிள்ளைப்பாக்கம் தொழில் பூங்காவில், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களின் தரத்தை சோதிக்க, 10 கோடி ரூபாய் செலவில் இ.எம்.ஐ., - இ.எம்.சி., மையத்தை, 'சிப்காட்' நிறுவனம் அமைக்கிறது.
தமிழக அரசின் சிப்காட் நிறுவனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தொழில் துவங்குவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில், 379 ஏக்கரிலும்; திருவள்ளூர் மாவட்டம் மாநல்லுாரில், 474 ஏக்கரிலும் தொழில் பூங்காக்களை அமைக்கிறது.
மத்திய அரசு, எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள் தொகுப்பு திட்டத்தின் கீழ், பிள்ளைப்பாக்கம் தொழில் பூங்காவுக்கு, 278 கோடி ரூபாயும், மாநல்லுார் பூங்காவுக்கு, 328 கோடி ரூபாயும் மானியம் வழங்குகிறது.
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் வசதிக்காக, தொழில் பூங்காக்களில் பொது உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட உள்ளன.
அதன்படி, பிள்ளைப்பாக்கத்தில், 10 கோடி ரூபாய் செலவில், இ.எம்.ஐ., அதாவது 'எலக்ட்ரோமேக்னடிக் இன்டர்பிரன்ஸ்' மற்றும் இ.எம்.சி., அதாவது, 'எலக்ட்ரோமேக்னடிக் காம்ப்பாட்டிபிலிட்டி' மையம் அமைக்கப்படுகிறது.
இங்கு, நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் தரத்தை பரிசோதித்துக் கொள்ளலாம்.
இந்த மையம் கட்டுவதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை சிப்காட் துவக்கியுள்ளது.