ADDED : அக் 02, 2025 12:07 AM

புதுடில்லி : சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட ஒரு சோலார் உதிரிபாகம் மற்றும் மொபைல் கவர்களுக்கு, பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிப்பது தொடர்பான விசாரணையை வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் துவங்கியுள்ளது.
ரினியூசிஸ் இந்தியா நிறுவனம் மற்றும் அகில இந்திய மொபைல் கவர் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவை அளித்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
சீனாவில் இருந்து குறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்படும் சோலார் என்காப்சுலன்ட் எனும் உதிரி பாகத்தின் காரணமாக, உள்நாட்டுத் தொழில்துறையினர் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த உதிரிபாகம் சோலார் மின் தகடுகள் தயாரிக்க பயன்படுகிறது.
“இந்தியாவில் உள்ள இந்த குறைந்த விலை இறக்குமதிகளின் இருப்பு, இதன் அளவு மற்றும் விளைவுகளை தீர்மானிக்க இந்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது” என வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், இந்த இறக்குமதிகளின் காரணமாக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டால், வரி விதிக்க பரிந்துரைக்கப்படும். வரி விதிப்பது தொடர்பாக நிதி அமைச்சகம் தான் இறுதி முடிவு எடுக்கும்.