தமிழக அரசின் தொழில் தரவு தளத்துக்காக 17 லட்சம் நிறுவன விபரங்கள் சேகரிப்பு
தமிழக அரசின் தொழில் தரவு தளத்துக்காக 17 லட்சம் நிறுவன விபரங்கள் சேகரிப்பு
ADDED : ஏப் 24, 2025 11:49 PM

சென்னை:தொழில்களுக்கு உதவ, தமிழக அரசின், 'பேம் டி.என்' நிறுவனம், தொழில் தரவு தளத்தை உருவாக்குகிறது.
இதுவரை, அரசு துறைகள் வாயிலாக, 17 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை நிறுவனங்கள் உள்ளன, அவை என்னென்ன பொருட்களை உற்பத்தி செய்கின்றன என்பது தொடர்பான துல்லிய விபரங்கள், அரசிடம் இல்லை.
எனவே, தமிழக சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும், 'பேம் டி.என்' நிறுவனம், தொழில் நிறுவனங்களின் விபரங்கள் அடங்கிய தமிழக தொழில் தரவு தளத்தை உருவாக்கி வருகிறது.
இதற்காக, மின்சார வாரியம், வணிக வரி, உள்ளாட்சி அமைப்புகள், சிப்காட், சிட்கோ உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் மற்றும் துறைகளிடம் இருந்து, பதிவு செய்துள்ள நிறுவனங்களின் விபரம் சேகரிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இறுதியில் துவங்கிய இந்த பணியில் இதுவரை, 12 துறைகளில் இருந்து, 17 லட்சம் நிறுவனங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
அதில், 5.82 லட்சம் நிறுவனங்கள் மத்திய, மாநில அரசுகளின் மானிய சலுகை கிடைக்க உதவும், 'உத்யம்' தளத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. மற்ற நிறுவனங்களையும் பதிவு செய்யும் பணி நடக்கிறது.
எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை நிறுவனங்கள் உள்ளன, அவை என்னென்ன பொருட்களை உற்பத்தி செய்கின்றன என்பது தொடர்பான துல்லிய விபரங்கள், அரசிடம் இல்லை