ADDED : ஜூலை 08, 2026 01:08 AM

ஐ.ஹெச்.சி.எல்., நிறுவனம் வசமான 20 ஹோட்டல்கள்
ஐ.ஹெச்.சி.எல்., எனும் இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி, நடப்பு 2026--27ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், 20 புதிய ஹோட்டல்களை தனது பிராண்டுகளின் கீழ் கொண்டு வருவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. இதன் வாயிலாக, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது, அதன் மொத்த ஹோட்டல் எண்ணிக்கை 645 ஆகவும், செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் 263 ஆகவும் உயர்ந்துள்ளன.
ரூ.3,011 கோடிக்கு ஆர்டர் பெற்ற பிரீமியர் எனர்ஜிஸ்
சோலார் மாட்யூல்களை தயாரிக்கும் பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 3,011 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது. மின் உற்பத்தியாளர்கள் மற்றும் சோலார் மாட்யூல் உற்பத்தியாளர்களிடம் இருந்து கிடைத்துள்ள இந்த ஆர்டர்களின்படி, 1,846 மெகாவாட் திறனுள்ள சோலார் செல்கள் மற்றும் மாட்யூல்கள், 2026--27 மற்றும் 2027--28ம் நிதியாண்டுகளில் தயாரித்து வழங்கப்படும்.
கென்ய பழச்சாறு நிறுவனத்தை வசமாக்கும் வருண் பெவரேஜஸ்
வருண் பெவரேஜஸ், கென்யாவில் வி.பி.எல்., எனும் துணை நிறுவனத்தை நடத்திவருகிறது. இந்நிலையில், வி.பி.எல்., கென்யாவில் உள்ள தேவ்யானி புட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மதிப்பு கூட்டப்பட்ட பால் பானங்கள், பழச்சாறுகள் மற்றும் குடிநீர் வணிகத்தை, 304 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளது. இந்த ஒப்பந்தம் ஆக., 1க்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக, கிழக்கு ஆப்ரிக்காவில் தனது சந்தை நிலையை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஐ.டி.ஐ., மேம்பாட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல்
நாடு முழுதும் தேர்வு செய்யப்பட்ட 200 ஐ.டி.ஐ., குழுமங்களில், பிரதமரின் 'பி.எம்.-,சேது' திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், கிட்டத்தட்ட 1,238 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன், ஐ.டி.ஐ.,களின் உள்கட்டமைப்பு, பயிற்சித் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஸ்விக்கியில் வெளிநாட்டு முதலீடு சரிந்தது
உணவு டெலிவரி மற்றும் விரைவு வர்த்தக நிறுவனமான ஸ்விக்கியில், வெளிநாட்டு முதலீட்டின் பங்கு 50 சதவீதத்துக்கும் கீழ் குறைந்து, 49.76 சதவீதமாக உள்ளது. இதனால், இந்தியர்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனமாக (ஐ.ஓ.சி.சி.,) தகுதி பெறுவதற்கான முயற்சிக்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது. இந்த மாற்றத்தால், நிறுவனத்தின் நிர்வாகம், வாக்குரிமை அல்லது தொழில் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது என ஸ்விக்கி தெரிவித்துள்ளது.
