விண்வெளி 'ஸ்டார்ட்அப்'களுக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க முடிவு
விண்வெளி 'ஸ்டார்ட்அப்'களுக்கு ரூ.50 லட்சம் நிதி வழங்க முடிவு
ADDED : மே 25, 2025 12:16 AM

சென்னை:தமிழகத்தில், விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்த தலா, 50 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. மேலும், இந்நிறுவனங்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க, சென்னையில் வழிகாட்டி மையமும் அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில், விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்த, விண்வெளி தொழில்நுட்ப நிதியாக, 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாக, இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, இந்த நிதியின் கீழ், ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு, 50 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்க, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் இயங்கும், ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும், செயற்கைக்கோள் சோதனைகளுக்கு தேவையான முன்மாதிரி தயாரிப்பு ஆய்வகம், பரிசோதனை வசதி, தொழில் வளர் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வசதிகளை உள்ளடக்கிய மையம் சென்னையில் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடத்தை தேடும் பணி துவங்கியுள்ளது.
ஊக்கத் தொகையாக ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்
ஆலோசனை வழங்க வழிகாட்டி மையம் அமைக்கப்படும்
விண்வெளி தொழில்நுட்ப நிதிக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு.