ADDED : டிச 07, 2025 01:57 AM

சிறு, குறு தொழில் துறை உற்பத்தியாளர்களுக்கு, தொழில் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், தென்னிந்திய பாதுகாப்பு தளவாட உபகரண வினியோகஸ்தர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் சங்கமான சிடா சார்பில், கோவை ரத்தினம் கிராண்ட் ஹாலில் நடந்த மூன்று நாள் கண்காட்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.
கண்காட்சியின் நோக்கம்
* உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்தல்
* சிறு, குறு தொழில் துறையினருக்கு பாதுகாப்புத் துறையில் தொழில் வாய்ப்புகளை உருவாக்குதல்
* புதிய கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்துதல்.
_____
இடம்பெற்ற நவீன உபகரணங்கள்
* முப்படைகளுக்குத் தேவையான ட்ரோன்கள்
* ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் ரோட்டர் கன்ட்ரோலர்
* இரவிலும் துல்லியமாக பயன்படுத்தும் தெர்மல் கேமரா
* பேரிடர் காலங்களில் பயன்படுத்த உகந்த உபகரணங்கள்
* ரோபோக்கள்
* ரோப் லாஞ்சர்.
____
நிறுவனங்களின் நம்பிக்கைகண்காட்சியில் பாரத் எர்த் மூவர்ஸ் லிட்., விமானப்படை, பி.இ.எல்., உள்ளிட்ட பல நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த கண்காட்சியில், தங்களுக்கு தேவையான வர்த்தக விசாரணை எளிதாக இருந்தது என, இந்த பெரிய நிறுவனங்கள் நம்பிக்கை தெரிவித்தன.__
மாணவர்கள் ஆர்வம்
நேற்றைய நிறைவு நாள் கண்காட்சியில், பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியரின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இவர்களின் ஆர்வத்தை புரிந்து கொண்ட பல நிறுவனங்கள், வருங்காலத்தில் இவர்களையும் ஸ்டார்ட் அப்புக்குள் கொண்டுவர வேண்டும் என்ற நோக்கில், அவர்களின் ஏராளமான கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் அளித்தனர்.
___
வரும் 2032ல் இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி, 3 லட்சம் கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், கோவையின் பங்களிப்பு 75,000 கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முப்படைகளுக்கு தேவையான உபகரணங்கள் தயாரிப்பில் ஏராளமான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. கோவையில் இருக்கும் பெரும்பாலான ஸ்டார்ட் அப் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இந்த கண்காட்சிக்கு வந்திருந்து பயனடைந்தனர்.
-பழனிகுமார்,
இயக்குநர், சிடா

