25 சதவிகிதம் முதலீட்டு மானிய திட்டம் சாய ஆலை துறையினர் மகிழ்ச்சி
25 சதவிகிதம் முதலீட்டு மானிய திட்டம் சாய ஆலை துறையினர் மகிழ்ச்சி
UPDATED : அக் 19, 2025 11:08 PM
ADDED : அக் 19, 2025 11:04 PM

திருப்பூர்: தமிழக அரசின் முதலீட்டு மானிய திட்டத்தில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதால், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த வாய்ப்பு உருவாகியுள்ளதாக, திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
![]() |
தமிழக அரசு சார்பில், 'பிராசசிங்' தொழில் பிரிவை மேம்படுத்தும் வகையில், 25 சதவீத முதலீட்டு மானிய திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், திருப்பூரில் இயங்கி வரும் சாய ஆலைகள், புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த தயாராகின. இருப்பினும், சிவப்பு நிற பட்டியலில் இருப்பதால், சாய ஆலைகள் இத்திட்டத்தில் பயன்பெற முடியாது என்று தெரியவந்தது.
முதலீட்டு உச்சவரம்பும் அதிகமாக இருந்தது. சாய ஆலைகளில் புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்தவும் அரசு உதவ வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. தமிழக அரசும் பரிசீலனை செய்து, திருப்பூர் சாய ஆலை தொழில்துறையினரும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை வாயிலாக, முதலீட்டு மானியம் பெறும் வகையில், நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதை தொடர்ந்து, 25 சதவீத மானியம் பெறும் முதலீட்டு மானிய திட்டத்தில், 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவும் துவங்கியுள்ளது.
'புதிய திட்டத்தில் நிபந்தனைகள் தளர்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது; இதுதான், திருப்பூருக்கு நிஜமான தீபாவளி' என்று, சாய ஆலையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.