முட்டைகள் காலாவதி அபாயம் ஏற்றுமதியாளர்கள் பரிதவிப்பு
முட்டைகள் காலாவதி அபாயம் ஏற்றுமதியாளர்கள் பரிதவிப்பு
ADDED : மார் 13, 2026 01:23 AM

நாமக்கல்:கப்பலில் அனுப்பிய முட்டைகள், சென்று சேராமல் காலாவதியாகும் அபாயம் உள்ளதால், நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் பரிதவித்து வருகின்றனர்.
இஸ்ரேல் - ஈரான் போர் பதற்றம் காரணமாக, கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால், இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லில் இருந்து கப்பலில், 77 கன்டெய்னர்களில் அரபு நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட 3.50 கோடி முட்டை, நடுக்கடலில் 12 நாட்களாக சிக்கியுள்ளது. முட்டைகளை அனுப்பி வைக்க மத்திய அரசு உதவ வேண்டும் என, முட்டை ஏற்றுமதியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து, நாமக்கல் முட்டை ஏற்றுமதியாளர்கள் கூறியதாவது:
நாமக்கல் மண்டலத்தில், 1,100க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில், 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினமும், 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாள்தோறும், 70 லட்சம் முட்டை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியான 3.50 கோடி முட்டைகள் நடுக்கடலில் காலாவதி ஆகும் ஆபத்தில் உள்ளதால், ஏற்றுமதியாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். எனவே, மத்திய வேளாண்மை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முட்டைகளை உரிய நாட்டுக்கு அனுப்பி வைக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

