பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன் உச்சவரம்பு உயருமா என எதிர்பார்ப்பு
பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தில் கடன் உச்சவரம்பு உயருமா என எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 20, 2025 12:54 AM

சென்னை,:பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் உச்சவரம்பை, 1 கோடி ரூபாயாக உயர்த்துமாறு மத்திய அரசுக்கு, சிறு, குறு தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ், உற்பத்தி சார்ந்த தொழில் துவங்க அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரையும்; சேவை சார்ந்த தொழில் துவங்க அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரையும் மத்திய அரசு கடன் வழங்குகிறது.
இதற்கு, 15 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. தற்போது, சிறு, குறு நிறுவனங்களுக்கான முதலீட்டு தொகை உயர்த்தப்பட்டுள்ளதால், கடன் உச்சவரம்பை உயர்த்துமாறு, மத்திய அரசுக்கு சிறு தொழில்முனைவோர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க பொதுச்செயலர் வாசுதேவன் கூறியதாவது:
மத்திய அரசின் சார்பில் பல்வேறு திட்டங்களின் நிலையை ஆய்வு செய்ய பார்லிமென்ட் எம்.பி.,க்கள் குழு, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 17ம் தேதியன்று கூட்டம் நடத்தினர். இதில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தொடர்பாக, 'டான்ஸ்டியா'விடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
கடந்த ஆண்டில், அத்திட்டத்தை செயல்படுத்தியதில் தமிழகம் ஐந்தாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் உச்சவரம்பு, உற்பத்தித் துறையில் 50 லட்சம் ரூபாயாகவும்; சேவை துறையில், 20 லட்சம் ரூபாயாகவும் உள்ளது. மத்திய அரசு, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பிரிவில், குறுந்தொழில் முதலீட்டு வரம்பை, 1 கோடி ரூபாயில் இருந்து, 2.50 கோடி ரூபாயாக சமீபத்தில் உயர்த்தியுள்ளது.
எனவே, பிரதமர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் வழங்கப்படும் கடன் உச்சவரம்பை, 1 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என, எம்.பி.,க் கள் குழுவிடம் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.

