ரூ.84,000 கோடியை திரும்ப பெற்ற அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்
ரூ.84,000 கோடியை திரும்ப பெற்ற அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள்
ADDED : அக் 22, 2024 10:15 AM

புதுடில்லி: இந்திய பங்குச் சந்தையில் இருந்து அக்டோபரில் மட்டும் இதுவரை, அதிகபட்சமாக 84,000 கோடி ரூபாய் முதலீட்டை அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுஉள்ளனர்.
அன்னிய நிறுவன முதலீட்டாளர்களின் தொடர்ச்சியான வெளியேற்றத்துக்கு சீன பொருளாதாரக் கொள்கை, இந்திய பங்குகளின் உயர் மதிப்பீடு, இரண்டாவது காலாண்டில் நிறுவனங்களின் மிதமான வளர்ச்சி, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை காரணமாக கூறப்படுகின்றன.
பண்டிகை காலமான அக்டோபரில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச் சந்தையில், கிட்டத்தட்ட 84,000 கோடி ரூபாய் முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் திரும்ப பெற்று உள்ளனர்.
இது, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில், கோவிட் சமயத்தில், 58,932 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்று வெளியேறியதை விட அதிகமாகும்.
அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை தொடர்ச்சியாக விற்று வரும் நிலையில், 4 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உள்நாட்டு முதலீட்டாளர்கள் நடப்பாண்டில் பங்குகளை வாங்கி உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும், சீன நிறுவனங்களில் குவிந்த அன்னிய முதலீடு, கிட்டத்தட்ட 1.57 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.