உலகளாவிய திறன் மையங்கள் தமிழகத்தில் 300ஐ தாண்டியது
உலகளாவிய திறன் மையங்கள் தமிழகத்தில் 300ஐ தாண்டியது
ADDED : ஜூலை 11, 2025 11:08 PM

சென்னை:திறமையான பணியாளர் கிடைப்பது போன்ற காரணங்களால், ஜி.சி.சி., எனப்படும் உலகளாவிய திறன் மையங்கள் எண்ணிக்கை, தமிழகத்தில் 300ஐ தாண்டியுள்ளது.
மோட்டார் வாகனம், எலக்ட்ரானிக்ஸ், மருந்து, வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள், தொழில்நுட்ப மேம்பாடு, வணிக செயல்பாடு, நிதி, மனிதவளம், வாடிக்கையாளர் அனுபவம் உள்ளிட்ட சேவைகளுக்காக, உலகளாவிய திறன் மையம் அமைக்கின்றன.
நம் நாட்டில், பெங்களூரு, மும்பை, ஹைதராபாதில், அதிகளவில் இத்தகைய உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. தற்போது, உலகளாவிய திறன் மையம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய துறைகளில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக, கல்லுாரிகளிலேயே மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
இதனால், திறமையான பணியாளர்கள் கிடைப்பதால், பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்களை அமைக்க ஆர்வம் காட்டுகின்றன. தற்போது தமிழகத்தில் உலகளாவிய திறன் மையங்கள் எண்ணிக்கை, 305 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 60 மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.