ADDED : டிச 12, 2024 01:19 AM

புதுடில்லி:நாட்டின் நடுத்தர மற்றும் சிறு நகரங்களிலும், உலகளாவிய திறன் மையங்களை அமைக்கும் வகையில், புதிய கொள்கையை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
இது தொடர்பாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் புதிய கொள்கையில் இடம்பெற்றுள்ள தகவல் வருமாறு:
'டிரான்ஸ்பர் பிரைசிங்' எனப்படும் நிறுவனத்தின் ஒரு பிரிவு, மற்றொன்றுக்கு அளிக்கும் பொருட்கள் மற்றும் சேவைக்கான கட்டணம் உள்ளிட்ட விதிகளில் தெளிவை ஏற்படுத்த புதிய கொள்கை வகை செய்கிறது.
மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடுக்கும் கூடுதலாக ஊக்கத்தொகை மற்றும் வரிச் சலுகைகள் அளித்தல், அலுவலகங்கள் அதிகளவில் அமைந்துள்ள பகுதிகளில், அதிக நிலப்பரப்பிலான உலகளாவிய திறன் மையங்களை அமைப்பது ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
குறைந்த இட வசதியுள்ள சிறு நகரங்களில் மருத்துவம், நிதி ஆகிய துறைகளில் சிறிய மையங்களை அமைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.