அள்ளி கொடுத்த தங்க பத்திர முதலீடு 107 சதவிகித லாபம்
அள்ளி கொடுத்த தங்க பத்திர முதலீடு 107 சதவிகித லாபம்
ADDED : செப் 07, 2025 12:47 AM

புதுடில்லி:ரிசர்வ் வங்கியால், கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட ஆறாவது கட்ட தங்க பத்திரக் கணக்கை, முதிர்வுக்கு முன்னதாகவே முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, யூனிட் ஒன்றுக்கு 10,610 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது வெளியிடப்பட்ட அன்று இருந்த விலையோடு ஒப்பிடுகையில், 107.35 சதவீதம் அதிகமாகும்.
தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில், மத்திய அரசு தங்க பத்திர சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ல் துவங்கியது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். எட்டு ஆண்டுகளில் தங்க பத்திரம் முதிர்வடையும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் முன்கூட்டியே திரும்ப பெறலாம்.
அந்த வகையில், கடந்த 2020ம் ஆண்டு, செப்டம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்ட தங்க பத்திரங்களை, நாளை முதல் முன்கூட்டியே திரும்பப் பெறலாம். இந்நிலையில், 8ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்தில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என்பதால், நேற்று முதல் திரும்பப் பெற, ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
வெளியிடப்பட்ட அன்று ஒரு கிராம் தங்கம் 5,117 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 10,610 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3, 4, 5ம் தேதிகளில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலையைக் கொண்டு, யூனிட் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி ஒரு கிராம் தங்கத்துக்கு 5,493 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இது 107.35 சதவீதம் அதிகமாகும்.
முதலீட்டின் போது ' 5,117
தற்போது பெறுவது ' 10,610
உயர்வு 107.35 %