மாவட்டந்தோறும் ஏற்றுமதி மையம் மகளிரை ஊக்குவிக்க அரசு திட்டம்
மாவட்டந்தோறும் ஏற்றுமதி மையம் மகளிரை ஊக்குவிக்க அரசு திட்டம்
ADDED : ஆக 14, 2025 12:53 AM

மதுரை:''பெண் தொழில்முனைவோர், மகளிர் சுயஉதவிக் குழுவினரை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் ஏற்றுமதி மையங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளதாக,'' மதுரையில் நடந்த தேசிய அளவிலான ஏற்றுமதி கருத்தரங்கில் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (டி.ஜி.எப்.டி.,) இணை இயக்குநர் ஆனந்த் மோகன் மிஸ்ரா தெரிவித்தார்.
மத்திய அரசின் குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான மேம்பாட்டு மற்றும் ஊக்குவிப்பு மைய மதுரை கிளை சார்பில், 'ஏற்றுமதியை நோக்கி பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவித்தல்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
அதில் அவர் பேசியதாவது:
மாவட்டந்தோறும் ஏற்றுமதிக்கான பொருட்களை கண்டறிந்து, மகளிர் சுயஉதவிக் குழுவினர், பெண் தொழில்முனைவோரை ஏற்றுமதியில் ஈடுபடுத்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தேவையான உதவிகளை செய்கிறது.
முதல்கட்டமாக எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், பி.எஸ்.ஜி., கல்லுாரியுடன் டி.ஜி.எப்.டி., இணைந்து, சிறப்பு ஏற்றுமதி மையத்தை நிறுவியுள்ளது. தொழில்துறை சங்கங்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகளை இணைக்கும் தளமாக இந்த மையம் செயல்படுகிறது. இது மின் வணிக தளங்கள் மூலம் உலகளவில் செல்ல விரும்பும் ஏற்றுமதியாளர்களுக்கு உதவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.