17,000 வாட்ஸாப் கணக்குகளை முடக்கியது உள்துறை அமைச்சகம்
17,000 வாட்ஸாப் கணக்குகளை முடக்கியது உள்துறை அமைச்சகம்
ADDED : நவ 21, 2024 10:22 PM

புதுடில்லி:சைபர் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 17,000 வாட்ஸாப் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியுள்ளது.
டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி என்ற புதிய வகையிலான சைபர் குற்றங்களை தவிர்க்க, மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 17,000 வாட்ஸாப் கணக்குகளை முடக்கியுள்ளது.
இதில் பெருவாரியான கணக்குகள், 'சைபர்' குற்றங்களுக்கு பெயர்போன கம்போடியா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்தைச் சேர்ந்தவை. இந்த கணக்குகள் அனைத்துமே, ஆன்லைன் நிதி மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட கணக்குகள் என கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகாரின் பேரில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர்கள், மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்திடம் அளித்த புகார்கள் பரிசீலிக்கப்பட்ட பிறகு, வாட்ஸாப் கணக்குகள் கண்டறியப்பட்டு இவற்றை முடக்க வாட்ஸாப் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.