'கொள்கைகள் தொடர்வதால் நீடிக்கும் முதலீட்டாளர் நம்பிக்கை'
'கொள்கைகள் தொடர்வதால் நீடிக்கும் முதலீட்டாளர் நம்பிக்கை'
ADDED : செப் 29, 2025 11:23 PM

சென்னை : ''ஆட்சிகள் மாறினாலும், அரசின் கொள்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படுவதால், தமிழகம் குறித்து முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்,'' என, தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்தார்.
ஹிந்துஸ்தான் வர்த்தக சபையின், 79வது ஆண்டு கூட்டம், சென்னையில் நேற்று மாலை நடந்தது. சபையின் புதிய தலைவராக, 'டுகர் பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட்' நிறுவன தலைவர் ரமேஷ் டுகர் தேர்வு செய்யப்பட்டார்.
அவர் பேசும்போது, ''இந்தியாவில் தமிழகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சீனாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு, 400 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்படுகிறது; இது இந்தியாவில், 20 பில்லியன் டாலராக உள்ளது; ஆராய்ச்சிக்கு அதிகம் செலவிட வேண்டும்,'' என்றார்.
அமைச்சர் ராஜா பேசியதாவது:
தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசின் கொள்கைகள் இணைந்து செயல்படுவதால், தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது.
தமிழகத்தில், ஆட்சிகள் மாறினாலும், அரசின் கொள்கைகளில் மாற்றம் செய்வதில்லை. இது தொடர்ந்து செயல்படுத்தப்படுவதால், முதலீட்டாளர்களிடம் முதலீடு செய்ய நம்பிக்கை ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக ஒரே துறையில் தொழில் செய்பவர்கள், தொழில்நுட்பம், ஜவுளி போன்ற பல்வேறு துறைகளிலும் தொழில் துவங்க வேண்டும்.
நாட்டில் திறமையானவர்களின் தலைமையிடமாக தமிழகம் உள்ளது. மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு அவர் பேசினார்.