ADDED : மார் 18, 2024 12:45 AM

வருமான வரி கணக்கு தாக்கலில் தனிநபர் கடன் அதிக தாக்கம் செலுத்துவதில்லை என்றாலும், பயன்பாட்டிற்கு ஏற்ப இது மாறலாம்.
தனிநபர் கடன் வசதி, பல்வேறு நிதி தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள உதவுகிறது. ஈட்டுறுதி இல்லாமல் கிடைக்கும் இந்த கடனுக்கான வட்டி விகிதம் அதிகம் இருக்கும் என்றாலும், அவசர தேவையின் போது எளிமையான வாய்ப்பாக அமைகிறது.
வர்த்தகத்திற்கான செயல் மூலதனம், விடுமுறை பயணம், திருமண செலவு, வீட்டை புதுப்பிப்பது உள்ளிட்ட தேவைகளுக்காக தனிநபர் கடன் தொகையை நாடலாம். தனிநபர் கடன் பெறும் போது, கடன் நிர்வாகம் முக்கியம் என்பதோடு, இந்த கடன் தொடர்பான வருமான வரி அம்சங்களையும் அறிந்திருக்க வேண்டும். இந்த கடனுக்கு வரிச்சலுகை பொருந்துமா எனும் கேள்வியும் எழலாம்.
வருமான வரி
பொதுவாக, தனிநபர் கடன் வருமான வரி தாக்கலில் அதிக தாக்கம் செலுத்துவதில்லை. இந்த கடன் வரிக்கு உட்பட்ட வருமானமாக கொள்ளப்படுவதில்லை. கடனாக பெறும் பணத்தை வட்டியுடன் திரும்பி செலுத்தும் பொறுப்பு வாங்குபவருக்கு இருக்கிறது. எனவே இது வருமானமாக அமையாது.
மேலும், வீட்டுக்கடன் அல்லது கல்விக்கடன் போல, தனிநபர் கடனுக்கான வட்டிக்கு, வருமான வரி சலுகை கோர முடியாது. எனவே, இதற்கான தொகையை வரி அளவுக்கான வருமானத்தில் இருந்து கழித்துக்கொள்ள முடியாது.
இந்த காரணங்களினால், தனிநபர் கடன் பற்றி வருமான வரி தாக்கலின் போது அதிகம் கவலைப்பட வேண்டியதில்லை. எனினும் குறிப்பிட்ட சூழலில் இந்த கடன் வருமான வரி சலுகைக்கு உட்படலாம்.
உதாரணத்திற்கு, தனிநபர் கடனை நுகர்வு தேவைக்கு பயன்படுத்தாமல் வர்த்தக நோக்கில் பயன்படுத்தி அதற்கான முறையான ஆவணங்களும் இருந்தால், கடனுக்கான வட்டி தொகைக்கு வருமான வரிச்சலுகை கோர முடியும். வர்த்தக வருமானத்தில் இருந்து, வட்டித்தொகையை கழித்துக்கொள்ளலாம்.
எச்சரிக்கை தேவை
அதே போல, தனிநபர் கடன் தொகையை வீட்டை புதுப்பிக்க அல்லது மேம்படுத்த பயன்படுத்தினால், வருமான வரி சட்டம் 24 பிரிவின் கீழ் கழிவு கோரும் வாய்ப்பு இருக்கிறது. மேலும், கடனை அடைப்பது 80 சி பிரிவின் கீழ் வரலாம். அப்போது வரிச்சலுகையை பயன்படுத்தலாம்.
எனவே, தனிநபர் கடனின் பயன்பாட்டைப் பொருத்து அதன் வரிச்சலுகை அமையும். எனினும், வருமான வரிச்சட்டம் நுணுக்கமான அம்சங்களை கொண்டிருப்பதால், தனிநபர் கடன் தொடர்பான வருமான வரிச்சலுகை அம்சங்கள் தொடர்பாக முறையான ஆலோசனை பெற்று செயல்படுவது அவசியம்.
தனிநபர் கடன் பயன்பாட்டில் கவனமாக இருப்பது அவசியம். தனிநபர் கடன் எளிதானது மற்றும் குறைந்த ஆவணங்கள் தேவைப்படக்கூடியது என்றாலும், சரியாக திட்டமிட்டு செயல்படாவிட்டல் கடன் சுமை அதிகரிக்கலாம். பணத்தை திரும்பி செலுத்தும் ஆற்றலை உறுதி செய்து கொண்ட பிறகே கடன் வசதியை நாட வேண்டும்.
மேலும், ஆடம்பர் தேவைகள், வாழ்வியல் செலவுகளுக்காக தனிநபர் கடனை நாடுவதை தவிர்ப்பது நல்லது. மாதத்தவணை கடன் சுமையை அதிகரிக்கும் என்பதோடு, கடனை முறையாக செலுத்துவது கிரெடிட் ஸ்கோரிலும் தாக்கம் செலுத்தும் என்பதை மனதில் கொள்ள வேண்டும். தனிநபர் கடனுக்கான தேவையை முழுமையாக பரிசீலிப்பதும் அவசியம்.

