'மல்லையா, நீரவ் மோடியை விஞ்சிய ஜேன் ஸ்ட்ரீட் மோசடி' செபிக்கு துப்பு கொடுத்தவர் தகவல்
'மல்லையா, நீரவ் மோடியை விஞ்சிய ஜேன் ஸ்ட்ரீட் மோசடி' செபிக்கு துப்பு கொடுத்தவர் தகவல்
ADDED : ஜூலை 09, 2025 11:08 PM

புதுடில்லி:விஜய் மல்லையா, நீரவ் மோடி, கேத்தன் பரேக் ஆகிய மூவரின் மொத்த மோசடியை காட்டிலும், 'ஜேன் ஸ்ட்ரீட்' நிறுவன மோசடி அதிகம் என, இந்த விவகாரத்தில் செபிக்கு துப்பு கொடுத்த மயங்க் பன்சால் தெரிவித்துள்ளார்.
மேலும், செபி தற்போது முடக்கியுள்ள 4,844 கோடி ரூபாய் என்பது, ஜேன் ஸ்ட்ரீட் தவறான வழியில் ஈட்டிய மொத்த லாபத்தில் ஒரு சிறிய பகுதி தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறிய பகுதி
மயங்க் பன்சால், ஐக்கிய அரபு எமிரேட்சை சேர்ந்த ஹெட்ஜ் பண்டு ஒன்றுக்கு தலைவராக செயல்பட்டு வருகிறார். கடந்த ஜூலை 3ம் தேதி, ஜேன் ஸ்ட்ரீட்டுக்கு எதிராக செபி நடவடிக்கை எடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே, இவர் இதுகுறித்து துப்பு கொடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
தற்போது செபி முடக்கியுள்ள 4,844 கோடி ரூபாய் என்பது, ஜேன் ஸ்ட்ரீட் தவறான வழியில் ஈட்டிய மொத்த லாபத்தில் ஒரு சிறிய பகுதி தான்.
இந்த இரண்டு ஆண்டு காலத்தில், ஜேன் ஸ்ட்ரீட் மொத்தம் 36,500 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இவை அனைத்துமே இந்திய சந்தைகளை ஏமாற்றி ஈட்டிய லாபம் தான்.
ஒன்பது மடங்கு லாபம்
காலாவதி நாள் வர்த்தகத்தின் வாயிலாக, கடந்தாண்டு மட்டும் அந்நிறுவனம் 25,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது விஜய் மல்லையா, நீரவ் மோடி, கேத்தன் பரேக் ஆகிய மூவரின் மொத்த மோசடியை தொகையைக் காட்டிலும் அதிகம்.
மேலும், சந்தையில் கடந்தாண்டு இரண்டாவது அதிக லாபம் ஈட்டிய நிறுவனத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், ஜேன் ஸ்ட்ரீட் ஒன்பது மடங்கு அதிக லாபம் ஈட்டியுள்ளது தெரிய வருகிறது. இதை அவ்வளவு எளிதாக கடந்து செல்ல முடியாது.
இவ்வாறு தெரிவித்தார்.