'ஹைப்பர்லுாப்' ரயில் சென்னை ஐ.ஐ.டி., உடன் மஹாராஷ்டிரா ஒப்பந்தம்
'ஹைப்பர்லுாப்' ரயில் சென்னை ஐ.ஐ.டி., உடன் மஹாராஷ்டிரா ஒப்பந்தம்
ADDED : ஆக 21, 2025 11:06 PM

மும்பை:மஹாராஷ்டிராவின் நவி மும்பை துறைமுகத்தில் இருந்து, பால்கரில் உள்ள வாதவன் துறைமுகத்துக்கு விரைவாக சரக்குகளை பரிமாற்றம் செய்வதற்கு வசதியாக, ஹைப்பர்லுாப் வழித்தடத்தை நிறுவ, சென்னை ஐ.ஐ.டி.,யில் துவங்கப்பட்ட டி.யு.டி.ஆர்., என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்துடன், மஹாராஷ்டிரா அரசு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய சரக்கு பெட்டகங்களை கையாளும் நவி மும்பை துறைமுகம், சாலை மற்றும் ரயில் இணைப்புகள் வாயிலாக சரக்குகளை கையாள்வதில் நீண்ட காலமாக சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த துறைமுகத்தை, பால்கரில் அமைக்கப்பட்டு வரும் வாதவன் துறைமுகத்துடன் இணைக்க, புதிய போக்குவரத்து அமைப்பான ஹைப்பர்லுாப் நிறுவுவதற்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஆண்டுக்கு, 25 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் அமைக்கப்படும் இதற்கான தொழில்நுட்ப உதவிகளை, மும்பை ஐ.ஐ.டி, மற்றும் சென்னை ஐ.ஐ.டி., இணைந்து வழங்க உள்ளன.
ஹைப்பர்லுாப் தொழில்நுட்பம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் தென் மேற்கு ஆசியாவின் வளைகுடா நாடுகளில் பரிசோதனை அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது. எனினும், வணிகரீதியில் இன்னமும் துவங்கப்படவில்லை.