UPDATED : மார் 03, 2026 12:44 AM
ADDED : மார் 03, 2026 12:43 AM

புதுடில்லி: நாட்டின் தயாரிப்பு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த பிப்ரவரி மாதத்தில் நான்கு மாதங்களில் இல்லாத உயர்வு கண்டுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி வெளியிட்டுள்ள பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தேவை அதிகரிப்பு மற்றும் புதிய ஆர்டர்கள் உயர்வே இதற்கு முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ் அண்டு பி., நிறுவனத்தின் உதவியுடன் எச்.எஸ்.பி.சி., வங்கி மாதந்தோறும் இந்த அறிக்கையை வெளியிடுகிறது.
கடந்த மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தயாரிப்பு துறை நிறுவனங்களின் உற்பத்தி வளர்ச்சியை குறிக்கும் எச்.எஸ்.பி.சி., இந்தியா பி.எம்.ஐ., குறியீடு, கடந்த ஜனவரியில் 55.40 புள்ளிகளாக இருந்த நிலையில், பிப்ரவரியில் 56.90 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இந்த குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால் வளர்ச்சியையும்; குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும்.
உள்நாட்டு சந்தையில் தேவை அதிகரித்ததே விற்பனை வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆசியா, மத்திய கிழக்கு, அமெரிக்கா, கனடா நாடுகளில் இருந்து புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்தது பி.எம்.ஐ., உயர்வுக்கு உதவியது.
மொத்த புதிய ஆர்டர்களால், இந்திய தயாரிப்பாளர்கள் கூடுதல் உதிரிபாகங்கள், கச்சா பொருட்கள் கொள்முதல் செய்தனர்.
இந்த கூடுதல் பணிச்சுமையை சரிக்கட்ட கூடுதல் பணியாளர்களை பணியமர்த்தியதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


