முந்திரி ஏற்றுமதிக்கான லைசென்ஸ் அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை
முந்திரி ஏற்றுமதிக்கான லைசென்ஸ் அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை
ADDED : மார் 03, 2026 12:45 AM

சென்னை: ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரால் இந்திய முந்திரி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முந்திரி ஏற்றுமதிக்காக வழங்கப்படும் உரிம காலத்தை மத்திய அரசு நீட்டிக்க வேண்டும் என்றும் அனைத்திந்திய முந்திரி சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் செயலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
ஆண்டுக்கு 25,000 கோடி ரூபாய் அளவுக்கு முந்திரி வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் 2,500 கோடி ரூபாய் ஏற்றுமதி வாயிலாக கிடைக்கிறது.
தமிழகத்தில் பண்ருட்டி, அரியலுார், துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கிட்டத்தட்ட 600 முந்திரி பிரித்தெடுக்கும் ஆலைகள் செயல் படுகின்றன.
நாட்டின் முந்திரி உற்பத்தியில் 10 சதவீதம் தமிழகத்தில் விளைகிறது. இதோடு ஆப்ரிக்காவில் இருந்து ஓட்டுடன்கூடிய முந்திரி இறக்குமதி செய்யப்பட்டு, இங்குள்ள ஆலைகளில் ஓடுகள் நீக்கி தரமான முந்திரி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அமெரிக்கா, சவூதி அரேபியா, குவைத், பஹ்ரைன் நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்தாண்டு அமெரிக்காவின் அதிக வரி விதிப்பால் முந்திரி ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப் பட்டது.
இதை தொடர்ந்து மொத்த முந்திரி ஏற்றுமதியில் 50 சதவீதம் மத்திய கிழக்கு நாடுகள்தான் பங்களிக்கின்றன. துபாயிலுள்ள நிறுவனங்கள்தான் ஆப்ரிக்காவில் இருந்து முந்திரி இறக்குமதி செய்து, ஓட்டை நீக்கி, ஏற்றுமதி செய்ய நிதியுதவி வழங்குகின்றன.
இந்த போரால் அது முற்றிலும் தடைபட்டுள்ளது. வங்கி வாயிலாக அந்த நிதி தடையின்றி கிடைக்க அரசு உதவ வேண்டும்.
நிலைமை சீராகும் வரை முந்திரி ஏற்றுமதி உரிமத்துக்கு வழங்கிய 180 நாட்கள் கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும். அமெரிக்க வரி விதிப்பின்போது 520 நாட்கள் வழங்கப்பட்டதை போன்று அரபு நாடுகளுக்கான ஏற்றுமதிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.
முந்திரி ஏற்றுமதியாளர்களுக்கு பண நெருக்கடி ஏற்படாத வகையில் கொரோனா காலத்தில் வழங்கியதுபோல மூலதன நிதியை வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.

