ADDED : ஜூலை 01, 2025 10:37 PM

புதுடில்லி:நாட்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி, கடந்த ஜூன் மாதத்தில் 14 மாத உச்சத்தை எட்டியுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து, எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளைத் திரட்டி வருகிறது.
ஜூன் மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த மாதம், இந்திய தயாரிப்பு துறை நிறுவனங்களின் வெளிநாட்டு விற்பனை வலுவாக அதிகரித்ததைத் தொடர்ந்து, உற்பத்தியும், பணியமர்த்தல்களும் உயர்ந்துள்ளன. இதன் காரணமாக, தயாரிப்பு துறை வளர்ச்சியைக் குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு 14 மாதங்களில் இல்லாத அளவுக்கு 58.40 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்தில் 57.60 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். குறைவாக இருந்தால் சரிவைக் குறிக்கும்.
வலுவான தேவை காரணமாக உற்பத்தி, புதிய ஆர்டர்கள், வேலை உருவாக்கம் அனைத்துமே அதிகரித்துள்ளன. ஏற்றுமதி ஆர்டர்களைப் பொறுத்தவரை, இந்த ஆய்வு துவங்கப்பட்டதில் இருந்து மூன்றாவது அதிகபட்ச வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்துள்ளது.
தேவை அதிகரித்ததன் காரணமாக பணியமர்த்தல்களும் இதுவரை இல்லாத உச்சம் தொட்டன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.