UPDATED : ஆக 02, 2025 03:06 AM
ADDED : ஆக 02, 2025 01:49 AM

மும்பை:புதிய ஆர்டர்கள் அதிகரிப்பின் காரணமாக, நாட்டின் தயாரிப்பு துறை வளர்ச்சி, கடந்த ஜூலை மாதத்தில் 16 மாத உச்சத்தை எட்டியுள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கியின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]() |
உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த 400 நிறுவனங்களின் ஒவ்வொரு மாத தயாரிப்பு நிலவரம் குறித்து, எச்.எஸ்.பி.சி., வங்கி ஆய்வு நடத்தி, பி.எம்.ஐ., குறியீடாக வெளியிட்டு வருகிறது. 'எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா' எனும் நிறுவனம், இதற்கான தரவுகளைத் திரட்டி வருகிறது.
ஜூன் மாதத்துக்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய தயாரிப்பு துறை நிறுவனங்களின் வளர்ச்சி, தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. கடந்த மாதம் புதிய ஆர்டர்கள், உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்ததைத் தொடர்ந்து, தயாரிப்பு துறை வளர்ச்சியைக் குறிக்கும் பி.எம்.ஐ., குறியீடு 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு 59.10 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 58.40 புள்ளிகளாக இருந்தது.
இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். குறைவாக இருந்தால் சரிவைக் குறிக்கும்.
எதிர்கால வணிகச் சூழல் குறித்த நிறுவனங்களின் நம்பிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. நிறுவனங்களுக்கு இடையே நிலவும் போட்டியும், பணவீக்கம் குறித்த கவலையுமே இதற்கு முக்கிய காரணம்.
![]() |
இதன் காரணமாக புதிய பணியமர்த்தல்கள் கடந்தாண்டு நவம்பர் மாதத்துக்கு பிறகு ஜூலையில் குறைந்துள்ளது. விலை உயர்வைப் பொறுத்தவரை, கடந்த மாதம் உள்ளீட்டு பொருட்களின் விலை மற்றும் விற்பனை விலை இரண்டுமே அதிகரித்தன.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.