மார்ச் கிரெடிட் கார்டு செலவழிப்பு ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிப்பு
மார்ச் கிரெடிட் கார்டு செலவழிப்பு ரூ.2 லட்சம் கோடியாக அதிகரிப்பு
ADDED : ஏப் 28, 2025 12:44 AM

புதுடில்லி:கடந்த மார்ச் மாதத்தில் கிரெடிட் கார்டுகள் வாயிலான செலவுகள் 4 மாதங்களில் இல்லாத வகையில், 2 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது:
ஆண்டு இறுதி நிதி பரிவர்த்தனைகள் அதிகளவில் இருந்த நிலையில், கடந்த மார்ச்சில் கிரெடிட் கார்டுகள் வாயிலான செலவுகள் நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 2.01 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தன.
கடந்த 2024 - 25ம் நிதியாண்டில் வங்கிகள் 8 லட்சம் கார்டுகளை வினியோகித்திருந்தன. இது முந்தைய நிதியாண்டான 2023 - 24ல் சேர்க்கப்பட்ட 15 லட்சம் கார்டுகளை விட மிகக்குறைவாகும். இதற்கு கடந்த 2023 நவம்பரில் நடைமுறைக்கு வந்த பாதுகாப்பற்ற கடன்களில் உள்ள அதிக ஆபத்து குறித்த விதிமுறைகளின் திருத்தமும் ஒரு காரணமாகும்.
கடந்த 2025ம் நிதியாண்டில், இந்தியா கிரெடிட் கார்டு செலவினத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டது. கடந்த நிதியாண்டில் சாதனை அளவாக 21.16 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இது வலுவான நுகர்வோர் தேவை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கிய மாற்றத்தால் 15 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டில் இது 18.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
புதிய கார்டுகள் வெளியீடு வளர்ச்சியை கண்டாலும், சில வங்கிகள் சரிவை சந்தித்துள்ளன. மேலும், கடனைத் திருப்பிச் செலுத்தும் தகுதி மற்றும் முந்தைய வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நிதிச் சேவைகளை வழங்க, கடன் அளிக்கும் வங்கிகள் முன்னுரிமை அளிக்கின்றன.
இவ்வாறு தெரிவித்துள்ளது.