மார்கெட்டிங் செய்ய மானியம் 'தாட்கோவில்' திட்டம் அறிமுகம்
மார்கெட்டிங் செய்ய மானியம் 'தாட்கோவில்' திட்டம் அறிமுகம்
ADDED : பிப் 28, 2026 01:05 AM

சென்னை: எஸ்.சி., - எஸ்.டி., தொழில்முனைவோர், தங்கள் தொழில் குறித்து, 'மார்கெட்டிங்' மற்றும் 'பிராண்டிங்' செய்ய, அதிகபட்சம் 60,000 ரூபாய் வரை மானியம் வழங்கும் திட்டத்தை, 'தாட்கோ' அறிமுகம் செய்துள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம் எனப்படும், 'தாட்கோ' சார்பில், எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர் சுயதொழில் துவங்க, தொழிலை விரிவுப்படுத்த, மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், இச்சமூக இளைஞர்கள் சுயதொழில் துவங்க, திறன் பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தற்போது எஸ்.சி., - எஸ்.டி., தொழில்முனைவோருக்கான, 'பிராண்டிங் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவு மானியம்' எனும் புது திட்டத்தை, 'தாட்கோ' அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஏற்கனவே தொழில் செய்து வரும் இச்சமூக மக்கள், தங்கள் தொழில் மற்றும் தயாரிப்பு குறித்து, சமூக வலைதளம் மற்றும் பொது வெளியில் விளம்பரம் செய்யும் வகையில், அதிகபட்சம் 60,000 ரூபாய் வரை மானியம் வழங்க உள்ளதாக, தாட்கோ அறிவித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனம் வாயிலாக, பயனாளிகளின் வியாபாரத்திற்கு ஏற்ப, பிராண்டிங் ஆலோசனை, 'லோகோ' வடிவமைப்பு, சமூக வலைதள விளம்பரம், சந்தை தொடர்பு உள்ளிட்ட வசதிகள் செய்துத் தரப்பட உள்ளது. இதற்கு பயனாளிகள் தரப்பில், 20,000 ரூபாய் செலுத்த வேண்டும் என, 'தாட்கோ' அதிகாரிகள் தெரிவித்தனர்.

