சிறு நிறுவனங்களுக்கு மானியம் பெற்றுத்தர அமைச்சர் உறுதி
சிறு நிறுவனங்களுக்கு மானியம் பெற்றுத்தர அமைச்சர் உறுதி
ADDED : பிப் 27, 2026 02:12 AM

கோவை: 'சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அளித்து வந்த மானியங்களை, மீண்டும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்,' என, மத்திய எம் எஸ்.எம். இ., துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தார்.
கோவை கொடிசியாவில் தொழில்துறையினருடனான சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதன்பின் மத்திய எம்.எஸ்.எம்.இ., துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி அளித்த பேட்டி:
சிறு, குறு தொழில் நிறுவனங்கள், சுற்றுச்சூழலை பெருமளவில் மாசுபடுத்துவதில்லை. வேலைவாய்ப்பு அளிப்பதிலும் பெரும்பங்கு வகிக்கின்றன. சிறு, குறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் கடந்த ஆண்டை காட்டிலும் 13 சதவீதம் அதிகம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜாப் ஒர்க் வேலைகளுக்கான ஜிஎஸ்டி வரி விதியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும்.
சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில் வளர்ச்சிக்கு அரசு அளித்து வந்த மானியங்களை பெறுவதில் உள்ள சிரமங்கள் விரைவில் களையப்படும்.
வங்கிகளிடம் பேசி இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளோம். மத்திய அரசு தேவையான நிதியை ஒதுக்கி உள்ளது. இவற்றைப் பெறுவதில் சிரமம் இருக்காது என நினைக்கிறேன்.
மூலப் பொருட்களின் விலை குறைப்பது என்பது ஒரு அமைச்சகத்தின் கீழ் இல்லை. தொழில், வர்த்தகம் மற்றும் நிதி அமைச்சகம் சார்ந்தது.
இத்தகைய பிரச்னையை தீர்க்க பிரதமர் ஆலோசனை செய்து வருகிறார். பிரச்னைகள் விரைவில் தீரும் என எதிர்பார்க்கிறோம்.
கோவை தொழில்துறை அமைப்பினர் கடன் பெறுவதில் உள்ள பிரச்னை, மானியங்கள் பெறுவது, மூலப் பொருள் விலை போன்ற கோரிக்கைகளை தொடர்புடைய அமைச்சர்களுடன் பேச்சு நடத்த ஒருங்கிணைப்பு அவசியம். எங்களது அமைச்சகம் இந்த பணியை மேற்கொள்ளும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

