ஒரே பிரதமர் தலைமையில் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா
ஒரே பிரதமர் தலைமையில் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா
UPDATED : பிப் 02, 2026 04:35 AM
ADDED : பிப் 02, 2026 03:26 AM

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்தது. இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமனை மத்திய நிதி அமைச்சராக நியமித்தார்.
அடுத்ததாக, 2024ல் பா.ஜ., தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோதும், நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமன் தொடர்ந்தார்.
கடந்த 2019 மே 31ல் நிதி அமைச்சராக பொறுப்பேற்ற இவர், கொரோனா பெருந்தொற்று மற்றும் புவிசார் அரசியல் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் பொருளாதாரத்தை வழிநடத்தி, இந்தியாவை உலகின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரமாக மாற்றியுள்ளார்.
நேற்று முன்தினம் வரை, நிர்மலா சீதாராமன் தன் பதவி காலத்தில் ஆறு ஆண்டுகள் மற்றும் எட்டு மாதங்களை நிறைவு செய்துள்ளார். இதையடுத்து, தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை நேற்று அவர் தாக்கல் செய்தார்.
கடந்த 1950ல் நிதியமைச்சராக பொறுப்பேற்ற சி.டி.தேஷ்முக், ஆறு ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் பதவியில் இருந்தார். இந்த சாதனை, நிர்மலா சீதாராமனால் முறியடிக்கப் பட்டது.
அதேபோல், முந்தைய நிதி அமைச்சர்கள் பல்வேறு பிரதமர்களின் கீழ் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், ஒரே பிரதமரின் கீழ், ஒன்பதாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
முன்னதாக, முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், 1959 - 1964 வரை நிதியமைச்சராக இருந்த காலத்தில் ஆறு பட்ஜெட்களையும், 1967 - 1969க்கு இடையிலான காலகட்டத்தில் நான்கு பட்ஜெட்களையும் தாக்கல் செய்தார். இவர், வெவ்வேறு பிரதமர்களின் தலைமையில் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
முன்னாள் நிதியமைச்சர்களான சிதம்பரம் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் வெவ்வேறு பிரதமர்களின் கீழ் முறையே ஒன்பது மற்றும் எட்டு பட்ஜெட்டுகளைத் தாக்கல் செய்து உள்ளனர்.
• சுதந்திர இந்தியாவின் முதல் மத்திய பட்ஜெட்: 1947 நவ., 26ல், அப்போதைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியால் தாக்கல் செய்யப்பட்டது • நீண்ட பட்ஜெட் உரை: 2020 பிப்., 1ல் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் அதற்கான உரையை வாசித்தார். இதன் வாயிலாக, மிக நீண்ட பட்ஜெட் உரை ஆற்றியவர் என்ற சாதனையை அவர் படைத்தார் • குறுகிய பட்ஜெட் உரை: 1977ல் ஹிருபாய் முல்ஜிபாய் படேல் சமர்ப்பித்த இடைக்கால பட்ஜெட் உரை, 800 வார்த்தைகளுடன் முடிவுற்றது.

