தமிழகத்தில் ரூ.9.37 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்பு: நபார்டு
தமிழகத்தில் ரூ.9.37 லட்சம் கோடி கடன் வழங்க வாய்ப்பு: நபார்டு
ADDED : பிப் 05, 2025 11:33 PM

சென்னை:''தமிழகத்தில் வரும், 2025 - 26ம் நிதியாண்டில், விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களை உள்ளடக்கிய முன்னுரிமை துறைகளில், 9.37 லட்சம் கோடி ரூபாய்க்கு கடன்களை வழங்குவதற்கு வாய்ப்புள்ளது,'' என, நபார்டு வங்கியின் தமிழக முதன்மை பொது மேலாளர் ஆனந்த் தெரிவித்தார்.
'நபார்டு' எனப்படும் தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி சார்பில், மாநில கடன் கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் நேற்று நடைபெற்றது.
இதில், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமை செயலர் முருகானந்தம், நிதி துறை செயலர் உதயச்சந்திரன், கூட்டுறவு துறை செயலர் ராதாகிருஷ்ணன், நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் ஆனந்த் ஆகியோர், 'வளம் சார்ந்த மாநில அறிக்கை 2025 - 26'ஐ வெளியிட்டனர்.
நபார்டு பொது மேலாளர் ஆனந்த் பேசியதாவது:
தமிழகத்தில் விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களை உள்ளடக்கிய முன்னுரிமை துறைகளில், 2025 - 26ல், 9.37 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்க வாய்ப்புள்ளது. இது, நடப்பு நிதியாண்டிற்கான கடன் வாய்ப்பை விட, 12.41 சதவீதம் அதிகம்.
வரும் நிதியாண்டில் முன்னுரிமை துறைகளில், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறையில், 4.34 லட்சம் கோடி ரூபாயும்; சிறு, குறு, நடுத்தர தொழில் துறையில், 3.45 லட்சம் கோடி ரூபாயும்; கல்வி உள்ளிட்ட இதர துறைகளில், 1.58 லட்சம் கோடி ரூபாயும் கடன் வழங்க வாய்ப்பு உள்ளது.
வளம் சார்ந்த அறிக்கையில் தமிழக அரசு, என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உதவும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தங்கம் தென்னரசு, நிதி அமைச்சர்

