தேசிய ஒருங்கிணைந்த தரச்சான்று தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
தேசிய ஒருங்கிணைந்த தரச்சான்று தொழில் துறையினர் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 25, 2026 01:59 AM

திருப்பூர்:சிறு, குறு தொழில்துறை பயன்பெறும் வகையில், தேசிய அளவிலான ஒருங்கிணைந்த தரச்சான்று வழங்கும் நடைமுறையை செயல்படுத்த வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, இந்திய தரக்கட்டுப்பாட்டு கவுன்சில் சார்பில், தேசிய அளவிலான 'தரக்கட்டுப்பாடு மாநாடு - 2026', டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி, ஜவுளி உற்பத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற தலைப்பிலும், 'நிப்ட்- டீ அடல் இன்குபேஷன்' மைய தலைவர் செந்தில் குமார், திறன் வளர்ப்பு மற்றும் திறன் மேம்பாடு என்ற தலைப்பிலும் பேசினர்.
நாட்டின் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில், 68 சதவீத பங்களிப்புடன் திருப்பூர் இயங்கி வருகிறது. ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியை, திருப்பூரை கொண்டே அளவீடு செய்யலாம் என்றும் எடுத்துரைக்கப்பட்டது.
ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள், ஒருங்கிணைந்த தரச்சான்று பெறும் நடைமுறையை, செயல்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்கம், 'டெக்பா', 'சிம்கா', 'ரோஸ்பா' உள்ளிட்ட சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
மாநாடு குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க இணை செயலாளர் குமார் துரைசாமி கூறுகையில், ''மாநாட்டில், திருப்பூரின் வளம் குன்றா வளர்ச்சி நிலை உற்பத்தி சாதனைகள் விளக்கப்பட்டன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை எதிர்கொள்ள, தரச்சான்றிதழ் பெறும் நடைமுறையை எளிதாக்க வேண்டும் ,'' என்றார்.

