ADDED : ஜூலை 18, 2025 11:16 PM

புதுடில்லி:இந்தியாவில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என மத்திய அரசுக்கு, நிடி ஆயோக் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிடி ஆயோக் நிர்வாகி ஒருவர் தெரிவித்ததாவது:
தற்போது இந்தியாவில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்ய, நம் நாட்டின் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து பாதுகாப்பு தொடர்பான அனுமதி பெற வேண்டும். இதனால், சில ஒப்பந்தங்கள் மேற்கொள்வதில் தேவையற்ற தாமதம் ஏற்படுகிறது.
சீன நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் உரிமை பங்குகளில், 24 சதவீதம் வரை எவ்வித ஒப்புதலும் இன்றி முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டும். இதன் வாயிலாக, இந்தியாவில் அன்னிய நேரடி முதலீடுகளை அதிகரிக்க முடியும்.
இது தொடர்பாக வர்த்தக அமைச்சகத்தின் தொழில் துறை, நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகம் மட்டுமின்றி, பிரதமர் அலுவலகத்தால் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.