ADDED : பிப் 04, 2025 10:33 PM

புதுடில்லி:வடகிழக்கு பிராந்தியங்களில் உள்ள தொழில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கை, மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சென்னையில் இன்று துவக்கி வைக்கிறார்.
வடகிழக்கு மாநிலங்களில் முதலீடு செய்ய வாய்ப்புள்ள பல்வேறு துறைகளில், தமிழகத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களின் முதலீட்டை ஈர்ப்பதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், சென்னையின் கிண்டியில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் இன்று நடைபெறுகிறது. இதை துறைக்கான மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா துவக்கி வைக்கிறார்.
இக்கண்காட்சியில் அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் திரிபுரா ஆகிய எட்டு வடகிழக்கு மாநிலங்களின் தொழில் முதலீட்டுக்கு சாத்தியமான துறைகள் குறித்த விளக்க காட்சி இதில் இடம்பெறுகிறது.
வேளாண் உணவு பதப்படுத்துதல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள், பொழுது போக்கு மற்றும் விளையாட்டு, எரிசக்தி, உட்கட்டமைப்பு மற்றும் தளவாடங்கள், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், கல்வி மற்றும் திறன்மேம்பாடு, சுகாதாரம், ஜவுளி, கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் பல்வேறு வகையான முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இதில் விளக்கப்படுகின்றன.