ADDED : ஏப் 30, 2025 11:10 AM

மும்பை: ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் பிப்ரவரி மாத வாகன விற்பனை தரவுகள் உண்மைதானா என, சந்தை கட்டுப்பாட்டாளரான செபி விசாரணையை துவக்கி உள்ளது.
மின்சார வாகன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஓலா எலக்ட்ரிக் நிறுவனம், கடந்த பிப்ரவரியில் 25,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்ததாக, தன் விற்பனை அறிக்கையில் தெரிவித்திருந்தது. ஆனால், அரசின் 'வாகன்' தளத்தில் பதிவான தரவுகளின்படி, 8,600 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.
விற்பனை விபரங்கள் குளறுபடி தொடர்பாக விளக்கமளித்த ஓலா நிறுவனம், பதிவு செய்வதில் ஏற்பட்ட தற்காலிக தாமதம் என காரணம்  கூறி, இரண்டு நிறுவனங்கள் உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததுடன், இப்பிரச்னை விரைவில் தீர்க்கப்படும் என உறுதியளித்தது.
மேலும் டீலர்கள் வாயிலான விற்பனைக்கு பதிலாக, நுகர்வோருக்கு நேரடி விற்பனை வணிக மாதிரியை பின்பற்றுவதாக விளக்கமளித்திருந்தது.
செபி விசாரணை முடிந்து, அதன் முடிவுகள் வெளிவரும் போது, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் மீதான முதலீட்டாளர்கள் நம்பிக்கையில் அது, எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவரும்.

