ADDED : ஜன 15, 2025 09:12 AM

புதுடில்லி: தென் அமெரிக்க நாடுகளில் சோயாபீன் எண்ணெய் மலிவான விலையில் கிடைத்ததால், கடந்த மாதம் அதன் இறக்குமதி அதிகரித்து, பாமாயில் இறக்குமதி குறைந்ததுள்ளது.
உலகின் மிகப்பெரிய சமையல் எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, கடந்த மாதம் 4.20 லட்சம் டன் சோயாபீன் எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த நவம்பர் மாதத்தின் 1.53 லட்சம் டன்னுடன் ஒப்பிடுகையில், இரு மடங்குக்கும் அதிகமாகும். அதே நேரத்தில் பாமாயில் இறக்குமதி, ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.03 லட்சம் டன்னாக சரிந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக டிசம்பரில் சமையல் எண்ணெயின் இறக்குமதி 12.30 லட்சம் டன்னாக சரிந்துள்ளது. இது, கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் 13.10 லட்சம் டன்னாக இருந்தது.
மலேஷியா, இந்தோனேஷியாவிலிருந்தே அதிகப்படியான பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், பாமாயில் விலை அதிகரித்து காணப்படுவதால், மலேஷிய இறக்குமதிகள் சமீபகாலமாக குறைந்து வருகிறது. இந்நிலையில் அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய தென் அமெரிக்க நாடுகளில் சோயாபீன் எண்ணெய்யின் உற்பத்தி, அளவுக்கு அதிகமாக இருப்பதால், அதிக தள்ளுபடி வழங்கப்பட்டு மலிவான விலையில் கிடைக்கிறது. இதனால் இவற்றின் இறக்குமதி அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த டிசம்பர் மாதத்தில், மொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயிலின் பங்கு 42 சதவீதமாக குறைந்துள்ளது. அதே நேரத்தில், சோயாபீன், சூரியகாந்தி உள்ளிட்ட சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களின் பங்கு 58 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கடந்த மாதம் சூரியகாந்தி எண்ணெய்யின் இறக்குமதி 2.65 லட்சம் டன்னாக அதிகரித்தும்; கச்சா பாமாயிலின் இறக்குமதி 3.27 லட்சம் டன்னாக சரிந்தும் இருந்தன.